மூன்றாவது முறையாக தயாராகும் பிரித்தானியா... யார் யாருக்கு முதல் வாய்ப்பு
பிரித்தானியாவில் கொரோனா பரவலில் இருந்து தற்காத்துக்கொள்ள மூன்றாவது டோஸ் தடுப்பூசி வழக்க நிர்வாகம் தயாராகி வருகிறது.
முதற்கட்டமாக 70 வயதுக்கு மேற்பட்டவர்கள், மருத்துவ ரீதியாக பாதிக்கப்படக்கூடியவர்கள், முதியோர் இல்லங்களில் வசிப்பவர்கள் மற்றும் முன்கள பணியாளர்கள் ஆகியோருக்கு இந்த பூஸ்டர் தடுப்பூசி அளிக்கப்பட உள்ளது.
மேலும், 50 வயது கடந்தவர்கள் மற்றும் குளிர் காலத்தில் ஏற்படும் காய்ச்சலுக்கான தடுப்பூசி போட்டுக்கொள்பவர்களுக்கு அடுத்தகட்டமாக போடப்படும் என தெரிய வந்துள்ளது.
பொதுவாக, முழுமையான தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு 6 மாதங்கள் பாதுகாப்பு இருக்கும் என்பது உறுதி செய்ய போதுமான தரவுகள் தங்களிடம் இருப்பதாக நிபுணர்கள் தரப்பு தெரிவித்துள்ளது.
இதனால் பூஸ்டர் தடுப்பூசிகள் தேவைப்படுமா என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டு வருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் அரசு தரப்பில், உரிய ஆலோசனைகள் பெறப்பட பின்னர், செப்டம்பரில் இருந்து பிரித்தானியாவில் பூஸ்டர் தடுப்பூசி போடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே ஆண்டு தோறும் போடப்படும் காய்ச்சலுக்கான தடுப்பூசியுடன், இரண்டு கட்டமாக பூஸ்டர் தடுப்பூசியும் போடப்படும் என கூறப்படுகிறது.
இந்த நிலையில் கூடுதலாக 60 மில்லியன் பைஸர் தடுப்பூசி வாங்க பிரித்தானியா பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.