புதுவீடு கட்டி ஓராண்டுக்குள்... வியாபாரி குடும்பத்துடன் தூக்கிட்டு தற்கொலை
இந்திய மாநிலம் உத்தரபிரதேசத்தில் கடன் பிரச்னையால் வியாபாரி மனைவி, 2 குழந்தைகளுடன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் ஷாஜகான்பூர் அடுத்த கச்சா கத்ரா பகுதியில் அகிலேஷ் குப்தா (43) குடும்பத்துடன் வசித்து வந்தார். கடந்த தீபாவளியன்று, இப்பகுதியில் புதிய வீடுகட்டி குடிபெயர்ந்தார்.
இவருக்கு ரிஷு (40) என்ற மனைவியும், 12 வயது மகன் சிவாங், 6 வயது மகள் அபிஜீதா ஆகியோரும் உள்ளனர். இந்நிலையில், சம்பவ நாளன்று பால் பாக்கெட்டை வாங்கிக் கொண்டு அகிலேஷ் வீட்டிற்கு சென்றுள்ளார்.
நேற்று மதியம் 1 மணியளவில், அதேபகுதியைச் சேர்ந்த ஒருவர் அகிலேஷின் வீட்டிற்குச் சென்றார். உள்தாழிட்டு மூடப்பட்டிருந்த வீட்டின் கதவை தட்டினார். ஆனால், நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படவில்லை.
சந்தேகமடைந்த அவர், மேலும் சிலரை அழைத்துக் கொண்டு அகிலேஷின் வீட்டிற்கு சென்றார். வீட்டின் தரைத்தளத்தில் மருந்துக் கடையின் சுவற்றில் ஏறி பார்த்த போது, அகிலேஷ் மற்றும் அவரது மனைவி ரிஷு ஆகியோர் தூக்கில் தொங்கியதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
தகவலறிந்த பொலிசார், விரைந்து வந்தனர். 4 பேரின் சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். வீட்டில் இருந்த மேஜையின் மீது அகிலேஷ் எழுதிய தற்கொலை குறிப்புக் கடிதத்தை பொலிசார் கைப்பற்றினர்.
அதில், கடன் பிரச்னை இருப்பதால் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்கிறோம். உறவினர்களும், நண்பர்களும் மன்னித்துக் கொள்ளுங்கள் என்று எழுதப்பட்டிருந்தது.
புதுவீடு கட்டி குடிபுகும் முன் பரேலியில் உள்ள ஃபரித்பூரில் அகிலேஷ் வசித்து வந்தார். கடன் வாங்கி வீடு கட்டியது மற்றும் போதை பொருள் விற்பனையில் முதலீடு செய்தல் போன்ற காரணங்களால் நிதி நெருக்கடியில் அகிலேஷ் சிக்கியிருக்கலாம் என்றும்,
அதனால் குடும்பத்துடன் தற்கொலை செய்திருக்கலாம் என்றும் பொலிசார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.