ஆட்சி அமைத்த ஒரு வாரத்தில் மணிப்பூரில் மீண்டும் வெடித்த கலவரம் - பின்னணி என்ன?
மணிப்பூரில் புதிய ஆட்சி அமைத்த ஒரு வாரத்தில் மீண்டும் கலவரம் வெடித்ததன் பின்னணியை காணலாம்.
மணிப்பூர் கலவரம்
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் கடந்த 2023 ஆம் ஆண்டில் பெரும்பான்மையாக இருக்கும் மெய்தி இன மக்கள், தங்களது பழங்குடி அந்தஸ்து வழங்கக்கோரி போராட்டம் நடத்தினர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து. குக்கி பழங்குடியினர் பேரணி நடத்தியதில் இரு தரப்பிற்கு மோதல் வெடித்தது.
இந்த மோதல் மாநிலம் தழுவிய அளவில் பெரும் கலவரமாக வெடித்து, ஏராளமான வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டது. 250க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.
கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் அங்கு பாஜக ஆட்சி நடைபெற்று வந்த நிலையில், மணிப்பூர் முதல்வராக பதவி வகித்து வந்த பிரேன் சிங் வன்முறையை தூண்டும் வகையில் பேசிய ஆடியோவே கலவரத்திற்கு காரணம் என குற்றச்சாட்டு எழுந்தது.
இதனையடுத்து, கடந்த 09.02.2025 அன்று பிரேன் சிங் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து குடியரசு தலைவர் ஆட்சி அமுல்படுத்தப்பட்டது.

இந்நிலையில், குடியரசு தலைவர் ஆட்சி விலக்கப்பட்டு, கடந்த பிப்ரவரி 4 ஆம் திகதி பாஜகவை சேர்ந்த யும்னம் கேம்சந்த் சிங் மணிப்பூர் முதல்வராக பொறுப்பேற்றார்.
பின்னணி என்ன?
இந்த புதிய அரசில், குக்கி சமூகத்தை சேர்ந்த நெம்சா கிப்ஜென்(Nemcha Kipgen) துணை முதல்வராக பதவியேற்றார்.

இதற்கு அவர் சார்ந்த குக்கி சமூகத்தை சேர்ந்த அமைப்புகளே எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியது.

உக்ருல் மாவட்டத்தில் உள்ள லிட்டன் சரேய்கோங் கிராமத்தில் ஆயுதமேந்திய குக்கி குழுக்கள், அங்கிருந்த தங்குல் நாகா சமூக மக்களை தாக்கி, வீடுகளை எரித்ததாக கூறப்படுகிறது.

இந்த வன்முறைக்கு அஞ்சி தங்குல் நாகா சமூக மக்கள் பலர் அண்டை மாவட்டத்தின் பாதுகாப்பான பகுதிகளுக்கு தப்பி சென்றுள்ளனர். அதேவேளையில் குக்கி இன மக்களின் வீடுகளும் எரிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், 5 நாட்களுக்கு இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களை மாநில முதல்வர் யும்னம் கேம்சந்த் சிங் சந்தித்து ஆறுதல் தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |