இளவரசர் பிலிப் இறுதிச்சடங்கில் மேகன் கலந்து கொள்ள விரும்பினார்! நெருங்கிய வட்டாரம் விளக்கம்
இளவரசர் பிலிப் இறுதிசடங்கில் கலந்து கொள்ள மேகன் விரும்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரித்தானிய மகாராணியார் இரண்டாம் எலிசபெத்தின் கணவரும், இளவரசருமான (Duke of Edinburgh) பிலிப் கடந்த வெள்ளிக் கிழமை உயிரிழந்தார்.
இதையடுத்து இவரின் இறுதிச்சடங்கு வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ளது. பிலிப் மறைவு காரணமாக அமெரிக்காவில், மனைவி மேகனுடன் வசித்து வந்த இளவரசர் ஹாரி, லண்டன் வந்தடைந்தார்.
தற்போது கொரோனா கட்டுப்பாட்டு விதிகளுக்குட்பட்டு, குவாரண்டையில் ஹாரி இருக்கிறார்.
ஆனால், அவருடைய மனைவி மேகன் வரவில்லை. அவர் கர்ப்பமாக இருப்பதன் காரணமாக வரவில்லை என்று ஒரு புறம் காரணம் சொல்லப்பட்டாலும், மறுபுறம் அரச குடும்பத்தில் இன்னும் மேகனை ஏற்றுக் கொள்ளவில்லை, அதன் காரணமாகவே அவர் வரவில்லை என்று கூறப்பட்டது.
இதற்கு எல்லாம் முற்றுப் புள்ளி வைக்கும் வகையில், இளவரசர் பிலிப்பின் இறுதிச் சடங்கில் மேகன் கலந்து கொண்டிருப்பார் என்று ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
மேகனின் நெருங்கிய வட்டாரம் கூறிய தகவலின் படி, மேகன் தனது கணவருடன் சேர்ந்து பிரித்தானியாவுக்கு செல்ல விரும்பினார்.
ஆனால், அவர் கர்ப்பமாக இருப்பதால், வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டதாகவும், இதன் காரணமாகவே அவர் ஹாரியுடன் வரவில்லை என்று மேகனுக்கு நெருக்கமானவர்கள் கூறியுள்ளனர்.
இளவரசர் இறுதிச்சடங்கில் 30 பேர் மட்டுமே கலந்து கொள்ள அனுமதிக்கப்படவுள்ளனர்.
பக்கிங்ஹாம் அரண்மனை செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், பிலிப்பின் குடும்ப உறுப்பினர்கள், அவரது குழந்தைகள் மற்றும் பேரக்குழந்தைகள் ஆகியோர் மட்டுமே இதில் அடங்குவார்கள் என்று கூறியுள்ளார்.