ஜேர்மனிக்கு புலம்பெயர்வோர் பலர் சீக்கிரம் அங்கிருந்து வெளியேறிவிடுவது ஏன்?
ஜேர்மனியில் நிறைய வேலை வாய்ப்புகள் உள்ளன. ஒரு காலத்தில் வேலை தேடி அமெரிக்காவுக்கும், கனடாவுக்கும், அரபு நாடுகளுக்கும் மட்டுமே சென்ற மக்கள் பலருடைய கவனத்தை ஜேர்மனி ஈர்த்துவருகிறது.
ஆனால், ஜேர்மனிக்கு வேலைக்காக புலம்பெயர்ந்தவர்களில் பலர், சீக்கிரமாகவே அங்கிருந்து வெளியேறிவிடுகிறார்கள்.
காரணம் என்ன?
இப்படி வேலைக்காக ஜேர்மனிக்கு புலம்பெயர்பவர்கள் எதனால் நீண்ட காலம் ஜேர்மனியில் வாழ்வதில்லை, எதனால் அவர்கள் சீக்கிரமாக வெளியேறிவிடுகிறார்கள் என்பதை அறிய, வேலைவாய்ப்பு ஆய்வு நிறுவனமான IAB நிறுவனம் 18 முதல் 65 வயதுடைய புலம்பெயர்ந்தோரிடையே ஆய்வொன்றை மேற்கொண்டது.

ஆய்வு முடிவுகள், இப்படி வேலைக்காக ஜேர்மனிக்கு புலம்பெயர்பவர்கள் சீக்கிரம் ஜேர்மனியை விட்டு வெளியேற ஒரு காரணம் அல்ல, பல காரணங்கள் உள்ளன என்பதை தெரியப்படுத்தியுள்ளன.
வேலைக்காக ஜேர்மனிக்கு வந்துவிட்டு சீக்கிரம் வெளியேறுபவர்களில் அதிகம்பேர் இளைஞர்கள்.
அதாவது, தங்கள் துணைவரையும் குழந்தையையும் தங்கள் நாட்டில் விட்டு விட்டு வேலைக்காக வந்தவர்கள், தங்களுக்கு ஆங்கிலப்புலமை உள்ளது என்பதை நம்பி ஜேர்மனிக்கு வந்துவிட்டு, ஜேர்மனியில் அது வேலைக்கு ஆகாது என்பதை புரிந்துகொண்டவர்கள் என்னும் இந்த கூட்டத்தினர்தான் அதிகமாக ஜேர்மனியை விட்டு வெளியேறுகிறார்கள்.
இன்னொரு முக்கிய விடயம் என்னவென்றால், ஜேர்மனியில் விசா பெறுவது, குடியிருப்பு அனுமதி பெறுவது, குடியுரிமை பெறுவது ஆகிய எல்லா விடயங்களுமே மெதுவாகத்தான் நடக்கும்.
அத்துடன், வெளிநாட்டில் பெற்ற சான்றிதழ்களுக்கு அங்கீகாரம் பெறவும் நீண்ட நாட்கள் காத்திருக்கவேண்டும். அதிகாரிகள் மற்றும் வேலை வழங்குவோரும் அதற்கு உதவி செய்வதில்லை என பெரிய விமர்சனம் ஏற்கனவே உள்ளது.
எல்லாவற்றையும் விட மொழிப்பிரச்சினை பெரிய பிரச்சினையாக உள்ளது. ஏற்கனவே கூறியபடி, தங்கள் நாட்டில் தாங்கள் நன்றாக ஆங்கிலம் பேசுவோம் என்பதால் அதை நம்பி ஜேர்மனிக்கு வந்துவிட்டு, இங்கு ஆங்கிலம் எல்லாம் வேலைக்கு ஆகாது, ஜேர்மன் மொழி முக்கியம் என தெரியவர, மொழி கற்க முயன்று, அது கடினம் என தெரியவருவதால் வெளியேறுவோர் பலர் இருக்கிறார்கள்.
ஜேர்மனியில் முதியவர்களை கவனித்துக்கொள்ளும் வேலைக்கு நிறைய ஆட்கள் தேவைப்படுகிறார்கள். ஆனால், பெரிய மருத்துவமனைகளில் வேலை செய்வதற்கான தகுதி படைத்தவர்கள், அதுபோன்ற வேலை கிடைக்கும் என நம்பி ஜேர்மனிக்கு வந்துவிட்டு, சிறிய நர்ஸிங் ஹோம்களில் வேலை கிடைக்க, அது ஏமாற்றத்தை ஏற்படுத்திவிடுகிறது.
ஆக, மொத்தத்தில், குடும்பத்தை பிரிந்து வேலைக்கு வருதல், ஆவணங்கள் தொடர்பில் அலுவலகங்களில் ஏற்படும் தாமதம், வீடு கிடைப்பதில் உள்ள பிரச்சினைகள், மொழிப்பிரச்சினை, இதுபோக பாரபட்சம் போன்ற விடயங்கள் என பல காரணங்களால், வேலைக்காக ஜேர்மனிக்கு புலம்பெயர்வோர் சீக்கிரமாகவே ஜேர்மனியை விட்டு வெளியேறுகிறார்கள் என்பது ஆய்வு முடிவுகள் மூலம் தெரியவந்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |