ஈரான் மீதான தாக்குதலுக்கு அமெரிக்க மக்களிடையே அதிக ஆதரவில்லை: என்ன காரணம்?
அமெரிக்காவைப் பொருத்தவரை, அந்நாட்டின் ஜனாதிபதிகள் வெளிநாடுகளில் ராணுவ ஆபரேஷன் ஒன்றை நிகழ்த்தினால், உடனடியாக அவர்களுக்கு மக்கள் ஆதரவு கணிசமாக அதிகரிக்கும்.
முந்தைய ராணுவ ஆபரேஷன்கள் சில உதாரணமாக, அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ஜார்ஜ் H. W. புஷ், 1991ஆம் ஆண்டு வளைகுடா மீது போர் தொடுத்தபோது, அவருக்கு அமெரிக்க மக்கள் ஆதரவு 80 சதவிகிதத்துக்கும் அதிகமாக இருந்தது.

அதேபோல, செப்டம்பர் 11 தாக்குதல்களைத் தொடர்ந்து ஜார்ஜ் W. புஷ் ஆப்கானிஸ்தானில் நிகழ்த்திய தாக்குதலுக்கு அமெரிக்க மக்கள் ஆதரவு 90 சதவிகிதமாக இருந்தது.
ஈரான் மீதான தாக்குதலுக்கு ஆதரவில்லை
ஆனால், ட்ரம்பின் ஈரான் மீதான தாக்குதலுக்கு அமெரிக்க மக்கள் ஆதரவு அந்த அளவுக்கு இல்லை.
ட்ரம்பின் ஈரான் மீதான தாக்குதலுக்கு 27 சதவிகித மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளதாக சில ஆய்வுகளும், 41 சதவிகித மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளதாக சில ஆய்வுகளும் தெரிவிக்கின்றன.

அப்படியும் முந்தைய ஆபரேஷன்களை ஒப்பிடும்போது, ட்ரம்பின் ஈரான் மீதான தாக்குதலுக்கு மக்கள் ஆதரவு குறைவாகவே உள்ளது.
என்ன காரணம்?
போருக்கு வீரர்களை அனுப்பவேண்டும் என்றதுமே, இப்போதெல்லாம் இத்தாலி பிரதமர் ஜியார்ஜியா மெலோனிதான் நினைவுக்கு வருகிறார்.
உக்ரைன் போருக்கு இத்தாலி நாட்டுப் படைவீரர்களை அனுப்பவேண்டும் என கோரிக்கை எழுந்ததும், உடனடியாக, என் நாட்டு மக்கள் ஏன் காரணமில்லாமல் சாகவேண்டும் என்பதுதான் அவரது முதல் எண்ணமாக இருந்தது.

அமெரிக்க மக்களுக்கும் அந்த எண்ணம் உள்ளது. ஏற்கனவே, மத்திய கிழக்கில் பல போர்களை பார்த்துவிட்டார்கள் அமெரிக்க மக்கள்.
ஆப்கானிஸ்தானிலும், ஈராக்கிலும் பல ஆண்டுகளாக நடந்த போர்களில் ஆயிரக்கணக்கில் தங்கள் பிள்ளைகளை பலிகொடுத்த வலி அமெரிக்கர்களுக்கு மறக்கவில்லை.
அத்துடன், அந்தப் போர்கள் பல ட்ரில்லியன் டொலர்கள் அளவுக்கு செலவை ஏற்படுத்தியதையும் அவர்கள் மறக்கவில்லை.
ஆக, அதே மத்திய கிழக்கில் மீண்டும் ஒரு போர் என்றால், அமெரிக்க மக்கள் பலரால் அதை ஏற்றுக்கொள்ள இயலவில்லை.
அத்துடன், முந்தைய போர்களின்போது, அப்போது ஜனாதிபதிகளாக இருந்தவர்கள் மக்கள் முன் போருக்கான காரணம் குறித்து உரையாற்றினார்கள்.
ட்ரம்போ எப்போதும் எடுத்தோம் கவிழ்த்தோம் பேர்வழியாக இருக்கிறார். அத்துடன், வெவ்வேறு அதிகாரிகள் போருக்கு வெவ்வேறு காரணங்களைக் கூறியுள்ளார்கள்.
இருந்தும், யாரும் உருப்படியாக எந்த காரணத்தையும் கூறாததால் எதற்காக போர் நடக்கிறது என்பதே அமெரிக்க மக்கள் பலருக்கு புரியவில்லை.
ஏற்கனவே, ஈரான் குறித்து ட்ரம்ப் தப்புக் கணக்குப் போட்டுவிட்டார் என அரசியல் விமர்சகர்கள் கூறிவரும் நிலையில், போர் மேலும் மும்முரமாகுமானால், உயிரிழப்புகள் அதிகரிக்குமானால், ட்ரம்புக்கு மக்கள் ஆதரவும் அமைச்சரவையின் ஆதரவும் எவ்வளவு தேவை என்பதை அவர் புரிந்துகொள்ளும் நிலை உருவாகும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை!
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |