இந்தியாவின் மிகப்பெரிய தரவு மையம் - விசாகப்பட்டினத்தில் நிறுவனங்கள் முதலீட்டை குவிப்பது ஏன்?
உலகளவில் பெரு நிறுவனங்கள் செயற்கை நுண்ணறிவு மற்றும் அதற்கு தேவையான தரவு மையங்களில்(Data center) பல பில்லியன் டொலர்களை முதலீடு செய்து வருகின்றன.
தற்போது இந்தியாவின் மிகப்பெரிய தரவு மையத்தை அமைக்க ரிலையன்ஸ் நிறுவனம் முன்வந்துள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய தரவு மையம்
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள பொலிபள்ளி கிராமத்தில் முதல்கட்டமாக 500 மெகாவாட் திறன் கொண்ட தரவு மையம் ஒன்றை ரிலையன்ஸ் அமைக்க உள்ளது.

அக்டோபர் 2028க்குள் வணிக உற்பத்தியை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2030ஆம் ஆண்டிற்குள் 2 ஆம் கட்டத்தில் ஒரு ஜிகா வாட் திறன் கொண்ட தரவு மையம் ஒன்றை அமைக்க உள்ளது.
இதற்காக, 935 ஏக்கர் அளவிலான நிலத்தை ரிலையன்ஸ் நிறுவனம் கோரியுள்ளது. இதற்காக சுமார் 17 பில்லியன் டொலரை ரிலையன்ஸ் நிறுவனம் ஒதுக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதே பகுதியில், 15 பில்லியன் டொலர் மதிப்பில், சுமார் 600 ஏக்கர் பரப்பளவில் 1 ஜிகாவாட் திறன் கொண்ட தரவு மையத்தை கூகிள் அமைக்க உள்ளது.

இந்த பிரம்மாண்ட மையத்திற்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் ஆகியோர் அடிக்கல் நாட்டினர்.
The City of Destiny shall shape the destiny of tomorrow’s technology. Welcome to Vizag, @Google!#GoogleBreaksGroundInVizag #ChooseSpeedChooseAP pic.twitter.com/NaOm7iIVyV
— N Chandrababu Naidu (@ncbn) April 28, 2026
இவை தவிர, சிஃபி 500 மெகாவாட் தரவு மையத்தையும், டிஜிட்டல் கனெக்ஷன் 1 ஜிகாவாட் மையத்தையும் அமைக்க இலக்கு வைத்துள்ளன. அனந்த் ராஜ் கிளவுட் நிறுவனமும் விசாகப்பட்டினத்தில் 300 மெகாவாட் தரவு மையத்தை நிறுவ திட்டமிட்டுள்ளது.
ஆர்எம்இசட் 1 ஜிகாவாட் மற்றும் டில்மேன் குளோபல் ஹோல்டிங்ஸ் 300 மெகாவாட் திறன் கொண்ட தரவு மையங்களை அமைப்பதற்காக 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.
விசாகப்பட்டினத்தில் குவியும் முதலீடு
பெரு நிறுவனங்கள் விசாகப்பட்டினத்தில் தரவு மையங்களை அமைப்பதன் மூலம், இந்தியாவின் டேட்டா சென்டர் மையமாக விசாகப்பட்டினம் உருவெடுக்கிறது.

விசாகப்பட்டினத்தில் பெரு நிறுவனங்கள் முதலீட்டை குவிப்பதன் பின்னணியில், ஆந்திர மாநில அரசின் தரவு மைய கொள்கை 4.0 தான் காரணமாக கருதப்படுகிறது.
6 ஜிகாவாட் தரவு மைய திறனை ஆந்திர அரசு இலக்காக கொண்டுள்ள நிலையில், ஏற்கனவே 5.6 ஜிகாவாட் திட்டங்களுக்கு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.

மூலதனப் பொருட்களுக்கான 100% மாநில ஜிஎஸ்டி திருப்பி வழங்குதல், இயந்திரங்களுக்கான 10% மூலதன மானியம் மற்றும் குறைந்தபட்சம் 300 மெகாவாட் திறன் கொண்ட தரவு மையத் திட்டங்களுக்கான நேரடி மின்சாரக் கொள்முதல் விநியோக உரிமங்கள் ஆகிய சலுகைகளை ஆந்திர அரசு வழங்குகிறது.
மேலும், விசாகப்பட்டினம் கடலுக்கு அருகே அமைந்துள்ளதால் கடலுக்கடியிலான கேபிள் இணைப்புகளுக்கு ஏற்றதாக உள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |