கொரோனா பரவலுக்கே முற்றுப்புள்ளி வைக்குமா Omicron?: இது ஒரு நல்ல செய்தி என்கிறார் ஜேர்மன் அறிவியலாளர்
Omicron ஒரு நல்ல செய்தியாக இருக்கலாம், காரணம், கொரோனா என்னும் கொள்ளை நோய் முடிவுக்கு வருவதை இந்த Omicron வேகப்படுத்தலாம் என்கிறார்கள் சில அறிவியலாளர்கள்.
Omicron வகை கொரோனா வைரஸ் ஒரு கிறிஸ்துமஸ் பரிசாக மாறக்கூட வாய்ப்புள்ளது என்று கூறியுள்ளார் பேராசிரியர் Karl Lauterbach என்னும் ஜேர்மன் அறிவியலாளர்.
தென்னாப்பிரிக்க மருத்துவர்கள் இந்த Omicron வகை கொரோனா வைரஸ் தீவிரமற்ற அறிகுறிகளையே காட்டுவதாக தெரிவித்துள்ள நிலையில், அது தீவிரமற்ற நோயையே உருவாக்குமானால் அது ஒரு நல்ல செய்தியாக கூட மாறலாம் என்கிறார் பேராசிரியர் Karl.
தென்னாப்பிரிக்க மருத்துவர்கள், இந்த Omicron வகை கொரோனா வைரஸ், தலைவலி, களைப்பு போன்ற தீவிரமற்ற அறிகுறிகளையே உருவாக்குவதாக தெரிவிக்கிறார்கள். அத்துடன், இதுவரை இந்த புதிய கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஒருவர் கூட மருத்துவமனையில் அனுமதிக்கப்படவும் இல்லை, உயிரிழக்கவும் இல்லை.
இந்த கருத்து உண்மையாகக்கூட இருக்கலாம் என்று கூறியுள்ள East Anglia பல்கலைக்கழக தொற்றுநோயியல் நிபுணரான பேராசிரியர் Paul Hunter, அதே நேரத்தில், இதற்கு முன் பாதித்த அதிக அளவிலான தொற்று மற்றும் தடுப்பூசிகள் ஒருவேளை இந்த Omicron வகை கொரோனா வைரஸுக்கு எதிராக பாதுகாப்பு அளிப்பதும் அதற்கு காரணமாக இருக்கலாம் என்கிறார்.
இந்நிலையில், Omicron வகை கொரோனா வைரஸ் ஒருவரை மோசமான நிலைக்கு ஆளாக்குவதற்கு எவ்வளவு நாட்கள் எடுத்துக்கொள்ளும் என்பது தெரியாத நிலையில், அதன் தாக்கம் குறித்து அறிய குறைந்தது இரண்டு வாரங்களாவது தேவைப்படும் என்று எச்சரித்துள்ளார்கள்.
இதற்கிடையில், Omicron வகை கொரோனா வைரஸால் பாதிக்கப்படுள்ள இளைஞர்களைப் பொருத்தவரை, அவர்களை விட வயதில் மூத்தவர்களை ஒப்பிடும்போது, இளைஞர்களுக்கு தீவிரம் குறைந்த அறிகுறிகளே இருப்பது தெரியவந்துள்ளது.
இந்த அறிவியலாளர்கள் கூறுவது போல் இந்த Omicron வகை கொரோனா வைரஸ் கொள்ளைநோய்க்கு முடிவாக இருக்குமானால் மகிழ்ச்சிதானே!