ஜெயலலிதாவின் உயிரை காப்பாற்றி இருக்க முடியும்! அறிக்கையில் பகீர் தகவல்
ஜெயலலிதாவுக்கு வெஜிடேசன், குடல்நோய் அறிகுறி உபாதைகள் உள்ளிட்டவை குறித்து மருத்துவ அறிக்கையில் குறிப்பிடவில்லை
ஜெயலலிதாவுக்கு ஆஞ்சியோ, அறுவை சிகிச்சைக்கு வெளிநாட்டு மருத்துவர்கள் பரிந்துரை செய்தும் ஏன் கடைசி வரை நடக்கவில்லை என அறிக்கையில் கேட்கப்பட்டுள்ளது
அமெரிக்க மருத்துவரின் ஆலோசனையை ஏற்றிருந்தால் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உயிரை காப்பாற்றியிருக்க முடியும் என ஆறுமுகசாமி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை ஆணையத்தின் அறிக்கையை ஆறுமுகசாமி இன்று சட்டசபையில் தாக்கல் செய்தார். அதில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்கள் தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
விசாரணை அறிக்கையில் சசிகலா, மருத்துவர் கே.எஸ்.சிவகுமார், முன்னாள் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் குற்றம் செய்தவர்களாக கூறப்பட்டுள்ளது.
மேலும் அவர்கள் மீது விசாரணை நடத்த பரிந்துரைப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அப்போதைய தலைமை செயலாளர் ராம் மோகன் ராவ் செல்முறைக்களுக்காக பல்வேறு நாட்களில், 21 படிவங்களில் கையொப்பமிடுவது குறித்து அவர் அரசுக்கு கடிதம் வாயிலாக தெரிவிக்கவில்லை என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
எய்ம்ஸ் மருத்துவக் குழு 5 முறை அப்பல்லோ வந்திருந்தாலும் ஜெயலலிதாவுக்கு முறையான சிகிச்சை அளிக்கவில்லை என குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதற்கிடையில், அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்கள் அதிர்ச்சியை அளித்துள்ளன.
அதாவது, ஜெயலலிதாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டவுடன் மருத்துவமனைக்கு தாமதமின்றி அழைத்து சென்றுள்ளனர். ஆனால், அதன் பிந்தைய நிகழ்வுகள் சசிகலாவால் ரகசியமாக்கப்பட்டதாக தெரிய வந்துள்ளது.
மேலும், சுயலாபத்துக்காக ஜெயலலிதாவுக்கான ஆஞ்சியோ சிகிச்சையை சசிகலா தடுத்து இருக்கலாம். என்றும், இங்கிலாந்து மருத்துவரின் வாய்வழி கருத்தை ஏற்று, இதய அறுவை சிகிச்சை தேவையில்லை என அப்போது முடிவு செய்யப்பட்டுள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது.
ஒருவேளை அமெரிக்க மருத்துவரின் ஆலோசனையை ஏற்றிருந்தால் முதல்வரின் உயிரை காப்பாற்றியிருக்க முடியும் என்ற தகவல் அதிர்ச்சி அளித்துள்ளது. மருத்துவமனையின் 10 அறைகள் சசிகலா உறவினர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு இருந்ததாகவும், ஜெயலலிதா எந்த நேரத்திலும் வீடு திரும்பலாம் என்ற பொய்யான அறிக்கையை மருத்துவமனை வெளியிட்டு உள்ளது.
ஜெயலலிதாவின் உடல்நலக்குறைவு, அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்த உண்மை நிலையை வெளிப்படுத்த மருத்துவமனை தவறியதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.