அதே ஊதியம்... வாரத்தில் 4 நாட்கள் மட்டும் வேலை: பிரித்தானியாவில் அமுலுக்கு வந்த புதிய திட்டம்
பிரித்தானியாவில் செயல்படும் 30 நிறுவனங்களின் ஊழியர்கள் அடுத்த 6 மாதங்களுக்கு வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே பணியாற்றும் புதிய திட்டம் ஒன்று கொண்டுவரப்பட்டுள்ளது.
குறித்த திட்டத்தினால் ஊழியர்களில் பணியாற்றும் திறன் அதிகரிக்கும் என்றே ஆதரவாளர்கள் தரப்பில் கூறப்படுகிறது. ஆனால் குறைந்த வேலை நேரத்தில் அதிக வேலைப்பழுவால் ஊழியர்கள் கட்டாயம் அவதிப்படப் போகிறார்கள் என எதிர்ப்பாளர்கள் தரப்பு வாதிட்டு வருகிறது.
புதிய திட்டத்தின்படி வாரம் நான்கு நாட்கள் என மொத்தம் 35 மணி நேரம் ஊழியர்கள் பணியாற்றுவார்கள். மேலும் வேலை நாட்களில் ஊழியர்களே பணி நேரத்தை அவர்களின் வசதிக்கு ஏற்ப தெரிவு செய்து கொள்ளலாம்.
Canon நிறுவனம் உட்பட பிரித்தானியாவின் 30 நிறுவனங்கள் குறித்த வாரம் 4 நாள் வேலை திட்டத்தில் இணைந்துள்ளன. Morrisons மற்றும் Unilever நிறுவனன்களும் இந்த திட்டத்தில் இணைய ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.
இதேபோன்ற சோதனை முயற்சிகள் அமெரிக்கா, கனடா, அயர்லாந்து, அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளில் நடத்தப்பட உள்ளன, அதே நேரத்தில் ஸ்பெயின் மற்றும் ஸ்காட்லாந்தில் ஏற்கனவே சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
2019 ஆகஸ்டு மாதம் ஜப்பானில் செயல்பட்டுவரும் மைக்ரோசாப்ட் நிறுவனம் தங்களது 2,300 ஊழியர்களுக்கும் வாரம் நான்கு நாள் வேலை திட்டத்தை அறிமுகப்படுத்தியது.
அதனைத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட ஆய்வில் உற்பத்தித்திறன் 40 சதவீதம் உயர்ந்துள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. பத்தில் 9 ஊழியர்கள் இந்த புதிய வேலை முறையை ஆதரிப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
ஐஸ்லாந்தில், 2015 மற்றும் 2019 க்கு இடையில் நான்கு நாள் வேலை சோதனை மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட ஆய்வில் முயற்சி பெரும் வெற்றி என கண்டறிந்துள்ளனர்.
ஆனால் வாரத்தில் 24 மணி நேரமும் பொதுமக்கள் சார்ந்து பணியாற்றும் நிறுவனங்கள் அல்லது அமைப்புகளுக்கு குறித்த திட்டம் பொருந்தாது என்றே தெரிவிக்கப்பட்டுள்ளது.