தாத்தாவின் இறுதிச்சடங்கில் இளவரசர் வில்லியமும் ஹரியும் இணைந்த அந்த பொக்கிஷ தருணம்... பெருமகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ள அந்த வீடியோ
பிரித்தானிய மகாராணியாரின் கணவர் பிலிப்பின் மரணம் பிரித்தானியாவில் மட்டுமின்றி உலகம் முழுவதும் அவரைக் குறித்த நினைவலைகளை மீண்டும் எழுப்பியதை மறுக்க முடியாது.
ஆனால், அவரது மரணம் குறித்த செய்தி வெளியானபோதெல்லாம் பெரும்பாலான மக்கள் மனதில் கூடவே இன்னொரு கேள்வி எழுந்ததையும் மறுப்பதற்கில்லை.
அது, இளவரசர் பிலிப்பின் இறுதிச்சடங்கின்போதாவது, மேகனால் பிரிந்த ராஜ குடும்பம் மீண்டும் இணையுமா, இத்தனை காலம் இணைந்து நடந்த சகோதரர்கள் வில்லியமும் ஹரியும், தங்கள் தாத்தாவின் இறுதிச்சடங்கின்போதாவது மீண்டும் இணைந்து நடப்பார்களா என்ற கேள்விதான்.
எத்தனை பேர் மனதார வேண்டிக்கொண்டார்களோ தெரியாது, அவர்கள் விருப்பம்போலவே சகோதரர்கள் வில்லியமும் ஹரியும் மட்டுமல்ல, கூடவே ஹரியின் அன்பு அண்ணியும், வில்லியமுடைய மனைவியுமான கேட்டும் இணைந்து, மீண்டும் அதே மூவர் அணியாக நடைபோட்ட ஒரு பொக்கிஷ தருணம் வீடியோவாக பதிவாகியுள்ளது.
வழக்கமாக விசேஷித்த தருணங்களில் கார்களில் அமர்ந்து வெறுமனே கையை மட்டும் ஆட்டிவிட்டு செல்லும் ராஜ குடும்பத்தார், இம்முறை இளவரசர் பிலிப்பின் இறுதிச்சடங்குக்காக கார்களைத் துறந்து, குடும்பமாக இணைந்து, கால் நடையாகவே புறப்பட்ட அபூர்வக் காட்சியும் காணக்கிடைத்தது.
வெளியாகியுள்ள வீடியோவில், இளவரசர் சார்லஸை ஏற்றிச்செல்ல கார் ஒன்று வர, அவர் கார் வேண்டாம் என்று கூறி காரை அனுப்பிவிட்டு நடக்கத் துவங்க, அவருக்குப் பின்னால் மற்றவர்களும் நடக்கத் துவங்கும் காட்சியைக் காணலாம்.
பின்னர் இளவரசர்கள் வில்லியம், ஹரி, மற்றும் இளவரசி கேட் ஆகியோர் ஆராதனையை நடத்திய திருச்சபை தலைவர் ஒருவருக்கு நன்றி கூறிவிட்டு நடக்கத் துவங்குவதையும், முதலில் புறப்பட்ட வில்லியம், அவரைத் தொடர்ந்த கேட் ஆகியோர் தங்கள் அன்புச் சகோதரன் ஹரிக்காக ஒரு கணம் தாமதித்து, அவர் வந்ததும் மூவருமாக இணைந்து நடப்பதையும் காணலாம்.
அந்த வீடியோவைப் பொருத்தவரை, அது ஊடகவியலாளர்களுக்காக திட்டமிட்டு நடத்தப்பட்ட செயற்கையான ஒரு சம்பவமாக தெரியவில்லை.
எப்படி முன்பெல்லாம் வில்லியமும் கேட்டும் ஹரியுடன் இணைந்து மூவராக நடைபோடுவார்களோ, அதே காட்சியாகத்தான் இதுவும் தெரிந்தது. இனி என்ன நடக்கும் என்பது தெரியாது, அபூர்வ நிகழ்வுகள் பெரும்பாலும் திட்டமிடப்படாமல்தானே நடக்கும்!
அவ்விதத்தில் சகோதரர்கள் இணைந்த ஒரு காட்சி பெருமகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ந்து, மகாராணியாரின் பிறந்தநாள் நெருங்கும் நிலையில், முதன்முறையாக கணவர் இல்லாமல் ஒரு பிறந்தநாளை அவர் சந்திக்கும் நிலையில், அங்கும் குடும்பம் மீண்டும் இனைந்து அளவளாவும் ஒரு நெகிழ்ச்சி தருணம் உருவாக வாய்ப்புள்ளது.
என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்...