மீண்டும் ஒரு ஏமாற்றம்... பிரித்தானிய இளவரசர்கள் வில்லியம் ஹரி இணையும் வாய்ப்பு சந்தேகமே!
ராஜ குடும்பத்திலிருந்து பிரித்தானிய இளவரசர் ஹரியும் அவரது மனைவி மேகனும் வெளியேறி, உலகமே பார்க்கும் வகையில் குடும்பத்தை அவமதிக்கும் வண்ணமாக தொலைக்காட்சி பேட்டி ஒன்றும் கொடுத்ததைத் தொடர்ந்து குடும்ப உறவுகளுக்குள் பெரும் விரிசல் ஏற்பட்டது.
குறிப்பாக, எப்போது ஒன்றாக இருக்கும் வில்லியம் மற்றும் ஹரியின் பிரிவு பிரித்தானியர்களை சோகத்தில் ஆழ்த்தியது.
இதற்கிடையில், ஏற்கனவே திட்டமிட்டபடி, இளவரசி டயானாவின் 60ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, கென்சிங்க்டன் மாளிகையில், ஜூலை மாதம் ஒன்றாம் திகதி டயானாவின் சிலை ஒன்றை நிறுவ முடிவு செய்யப்பட்டிருந்தது.
அந்த சிலையைத் திறக்கும் நிகழ்ச்சி, பிரிந்த சகோதர்கள் மீண்டும் இணைவதற்கு ஒரு வாய்ப்பாக இருக்கும் என பலரும் எதிர்பார்த்திருந்தார்கள்.
ஆனால், இளவரசர் பிலிப்புடைய இறுதிச்சடங்குக்காக ஹரி பிரித்தானியா வந்தபோது, ராஜ குடும்பத்தார் பலர் அவரை கண்டுகொள்ளாததால் அவமதிக்கப்பட்டதாக உணரும் ஹரி, தனக்கு இரண்டாவது குழந்தை பிறப்பதை காரணமாக காட்டி அந்த சிலை திறப்பு நிகழ்ச்சியையே புறக்கணிக்கக்கூடும் என்ற தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், ஏமாற்றமளிக்கும் மற்றொரு செய்தியும் வெளியாகியுள்ளது.
அதாவது, சிலை திறப்பு விழா அன்று, வில்லியமும் ஹரியும் தனித்தனியே உரையாற்ற
முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதால், அந்த நிகழ்ச்சியாவது சகோதரர்கள்
இணைய ஒரு வாய்ப்பாக அமையும் என எதிர்பார்த்திருந்தவர்களுக்கு ஏமாற்றமே
மிஞ்சும் என்ற கருத்து தற்போது உருவாகியுள்ளது.