ஆப்கானிஸ்தானில் சிக்கிய இராணுவ வீரர் ஒருவரை மீட்க தானே களமிறங்கிய பிரித்தானிய இளவரசர்... ஒரு சுவாரஸ்ய தகவல்
ஆப்கானிஸ்தானில் சிக்கியிருந்த இராணுவ வீரர் ஒருவரை மீட்பதற்காக பிரித்தானிய இளவரசர் வில்லியம் தானே களமிறங்கியதாக ஒரு சுவாரஸ்ய தகவல் வெளியாகியுள்ளது.
இளவரசர் வில்லியம், Sandhurst என்ற இடத்தில் இராணுவ பயிற்சி பெற்றபோது ஆப்கன் வீரர் ஒருவரை சந்தித்திருக்கிறார்.
ஆப்கானிஸ்தான் தாலிபான்கள் கையில் வீழ்ந்த நிலையில், அமெரிக்க மற்றும் பிரித்தானிய படைகளுக்கு உதவிய ஆப்கானிஸ்தான் நாட்டவர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டது.
இளவரசர் வில்லியமுக்கு அறிமுகமான இந்த குறிப்பிட்ட வீரரின் குடும்பம் காபூலில் சிக்கியிருப்பதாக தெரியவந்ததையடுத்து, உடனடியாக அவரை மீட்க வில்லியம் நடவடிக்கை எடுத்துள்ளார்.
ராஜ குடும்பத்தினருக்கு உதவும் இராணுவ வீரர்களில் ஒருவரான Rob Dixon என்பவர் மூலம் அந்த ஆப்கன் வீரரைத் தொடர்பு கொண்ட வில்லியம், அவர் மூலம் அந்த ஆப்கன் வீரரையும் அவரது குடும்பத்தினரையும் காபூல் விமான நிலையத்திலிருந்து மீட்டு பிரித்தானியாவுக்கு கொண்டு வந்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து பேசிய முன்னாள் அதிகாரியாகிய Major Andrew Fox என்பவர், எங்களுக்கு இராணுவத்தில் கற்றுக்கொடுக்கப்பட்ட உண்மை, மற்றவர்கள் மீது மரியாதை போன்ற கொள்கைகளைக் கடைப்பிடித்து, அதன்படியே இளவரசர் அந்த இராணுவ வீரரை மீட்கும் விடயத்தில் செயல்பட்டுள்ளார் என்கிறார்.