காற்றில் சேதமடைந்த கண்ணாடி பாலம்... 330 அடி உயரத்தில் நடுங்கியபடி தொங்கிய சுற்றுலாப்பயணி: ஒரு திகில் காட்சி
சீனாவில் கண்ணாடியால் அமைக்கப்பட்ட பாலங்கள் சுற்றுலாப்பயணிகளை வெகுவாக கவர்ந்துவருகின்றன. நூற்றுக்கணக்கான அடி உயரத்தில் கண்ணாடியால் அமைக்கப்படும் அந்த பாலத்தின்மீது நடந்து செல்வதற்கு அதீத தைரியம் தேவை.
அந்த பாலத்தில் நடப்பதற்கு பயந்து நடுங்கும் சுற்றுலாப்பயணிகள், மற்றும் ஸ்பெஷல் எஃபெக்ட் மூலம் அந்த பாலத்திலுள்ள கண்ணாடி நொறுங்குவது போல தோற்றத்தை உருவாக்க, மக்கள் அலறும் வீடியோக்கள் ஆகியவை பிரபலம். இந்நிலையில், உண்மையாகவே அந்த பாலத்தில் அபாயகரமான வகையில் சிக்கிக்கொண்டார் ஒரு சுற்றுலாப்பயணி.
சீனாவின் Longjing என்ற கிராமத்திலுள்ள ரிசார்ட் ஒன்றில் அமைக்கப்பட்டுள்ள அந்த பாலத்தின் வழியாக சுற்றுலாப்பயணி ஒருவர் நடந்து செல்லும்போது, திடீரென மணிக்கு 90 மைல் வேகத்தில் காற்று வீச, பாலத்திலிருந்த கண்ணாடித்தகடுகள் சில அடித்துச் செல்லப்பட்டுள்ளன.
பாலத்தின் ஓரமாக அமைக்கப்பட்டுள்ள இரும்புக் கம்பிகளைப் பிடித்துக்கொண்டு நடுநடுங்கியபடி அந்த சுற்றுலாப்பயணி தொங்கிக்கொண்டிருக்கும் புகைப்படங்கள் வெளியாகி கிலியை ஏற்படுத்தியுள்ளன.
பின்னர், தீயணைப்பு வீரர்கள், பொலிசார், வனத்துறை அலுவலர்கள் மற்றும் சுற்றுலாத்துறை பணியாளர்கள் இணைந்து அவரை மீட்டுள்ளார்கள். பயந்துபோன அந்த சுற்றுலாப்பயணி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவருக்கு மன நல ஆலோசனை அளிக்கப்பட்டு வருகிறதாம்.