நானும் தடுப்பூசி போட்டுக்கொண்டிருக்கலாம்... 5 பிள்ளைகளின் தந்தை கூறிய கடைசி வார்த்தை
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் கொரோனாவால் இறந்த நபரின் கடைசி வார்த்தைகள் அவரது மொத்த குடும்பத்தையும் உலுக்கியுள்ளது.
சான் டியாகோவில் குடும்பத்துடன் விடுமுறையை கழிக்க சென்ற நிலையில் 39 வயதான Michael Freedy என்பவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
வெப்ப அலை காரணமாக உடல் சோர்ந்து காணப்படுவதாக முதலில் கருதி இருந்த Michael Freedy, பின்னர் கடுமையாக பாதிக்கப்பட, வியாழக்கிழமை சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.
இந்த நிலையிலேயே மைக்கேல் ஃப்ரீடியின் மனைவி முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார். அமெரிக்காவில் தடுப்பூசி போடும் பணிகள் துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வந்தாலும், பலர் தயக்கம் காட்டியே வருகின்றனர்.
அதே போன்று, மைக்கேல் ஃப்ரீடி குடும்பமும், தங்கள் குடும்பத்திற்கான சிறந்த தடுப்பூசியை தெரிவு செய்யும் பொருட்டு, ஓராண்டு காலம் தாமதப்படுத்தி வந்துள்ளனர்.
தடுப்பூசிக்கு எதிரானவர்கள் அல்ல தாங்கள் என குறிப்பிட்டுள்ள அவர், தங்கள் குடும்பத்திற்கு உகந்த தடுப்பூசி மற்றும் குறைந்த பக்க விளைவு கொண்ட தடுப்பூசியை தெரிவு செய்யவே தாமதித்ததாக கூறியுள்ளார்.
தற்போது மைக்கேல் ஃப்ரீடி இறக்கும் முன்னர் நாமும் அந்த தடுப்பூசியை போட்டுக்கொண்டிருக்கலாம் என வருத்தப்பட்டு தமக்கு கடைசியாக குறுந்தகவலளித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
5 பிள்ளைகளின் தந்தையான மைக்கேல் ஃப்ரீடி கொரோனாவுக்கு பலியானது மொத்த குடும்பத்தையும் உலுக்கியுள்ளது.
மட்டுமின்றி, தடுப்பூசிக்கு தயக்கம் வேண்டாம் எனவும், தகுதியான அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.