குடியிருப்பிற்கு தீவைத்துவிட்டு பீர், சிகரெட்டுடன் கொண்டாடிய பெண்: தெரிய வந்த அதிர்ச்சி காரணம்
அமெரிக்காவில் பெண்ணொருவர் அடுக்குமாடிக் குடியிருப்பு வளாகத்திற்கு தீ வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
முதல் நிலை தீவைப்பு
அமெரிக்காவின் வடக்கு கரோலினாவைச் சேர்ந்த மஹோகனி ஆஷ்லி மாஸ்ஸி (31) என்ற பெண், முதல் நிலை தீவைப்பு மற்றும் ஏழு நபர்களுக்குக் கடுமையான உடல் காயங்களை ஏற்படுத்திய பல தாக்குதல் குற்றச்சாட்டுகளுக்கு உட்படுத்தப்பட்டார்.

அவர் டர்ஹாமில் உள்ள யுனிவர்சிட்டி ரிட்ஜ் அடுக்குமாடிக் குடியிருப்பு வளாகத்திற்கு தீவைத்தார்.
பின்னர் அது எரிவதைப் பார்த்தபடியே சிகரெட் மற்றும் பீர் அருந்தியதாகக் கூறப்படுகிறது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த இந்த சம்பவத்தில் மாஸ்ஸியின் தாயார் மற்றும் சகோதரிகள் அங்கிருந்துள்ளனர்.
அதிர்ஷ்டவசமாக இதில் யாருடைய உயிருக்கும் ஆபத்து ஏற்படவில்லை. ஆனால், அவரின் தாயார் மற்றும் சகோதரர் உட்பட சிலர் காயமடைந்தனர். மேலும், அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் சரிசெய்ய முடியாத அளவிற்கு சேதமடைந்தது.
பலத்த காயங்கள்
தீயணைப்புத் துறை அதிகாரிகள் கூறுகையில், 18 குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்பட்ட நிலையில், அக்குடியிருப்பில் உள்ள 18 வீடுகளும் வசிப்பதற்கு தகுதியற்ற நிலைக்கு ஆளாகியுள்ளதாகத் தெரிவித்தனர்.

பின்னர் அதிகாரிகள் மாஸ்ஸியைக் கைது செய்து, அவர் மீது பல குற்றங்களுக்காக வழக்குப்பதிவு செய்தனர். அவர் சட்டவிரோதமாக தீ வைத்ததாகவும், அதனால் குடியிருப்பாளர்களுக்கும், அவசரகாலப் பணியாளர்களுக்கும் பலத்த காயங்கள் ஏற்பட்டதாகவும் நீதிமன்ற ஆவணங்கள் குற்றம்சாட்டுகின்றன.
இந்த குற்றச்சாட்டுகளுக்காக திங்கட்கிழமை நீதிமன்றத்தில் அவர் நிறுத்தப்பட்டபோது, அவரது உடமைகளுக்கு இடையில் கையால் எழுதப்பட்ட 'கொல்லப்பட வேண்டியவர்களின் பட்டியல்' ஒன்றைக் கண்டுபிடித்ததாகவும், ஒரு வாரத்திற்கு முன்பு அவர் அந்த அடுக்குமாடிக் குடியிருப்பு வளாகத்தில் மற்றொரு தீயை மூட்ட முயன்றதாகவும் புலனாய்வாளர்கள் குற்றம் சாட்டினர்.
தற்போது மாஸ்ஸி டர்ஹாம் கவுண்டி தடுப்பு மையத்தில் பிணை இல்லாமல் காவலில் இருக்கிறார். அவர் ஜூலை 2ஆம் திகதி மீண்டும் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளார்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |