காட்டுத்தீயால் 8,500 ஏக்கர் நிலம், 41 வீடுகள் எரிந்து சாம்பல்... தீவைத்ததாக இளம்பெண் கைது
கலிபோர்னியாவில் 8,500 ஏக்கர் நிலமும், 41 வீடுகளும், 90 பிற கட்டிடங்களும் எரிந்து சாம்பலாகி, அதனால் மக்கள் வீடுகளை விட்டு ஓட்டம் பிடிக்கும் நிலைமைக்கு ஆளான நிலையில், காட்டுத்தீயை பற்ற வைத்ததாக ஒரு இளம்பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆனால், Alexandra Souverneva (30) என்ற அந்த பெண் தன் மீதான குற்றச்சாட்டை மறுத்துள்ளார். தான் மலையேற்றத்துக்குச் சென்றதாகவும், அப்போது தாகம் காரணமாக கரடியின் சிறுநீரை கொதிக்க வைப்பதற்காக தீப்பற்றவைக்க முயன்றதாகவும் தெரிவித்துள்ளார் அந்த பெண்.
அதாவது, தான் வேண்டுமென்றே தீவைக்கவில்லை. அந்த இடம் ஈரமாக இருந்ததால் குச்சிகளில் தீப்பிடிக்கவில்லை என்று எண்ணி தான் அங்கிருந்து சென்றுவிட்டதாகவும், அதற்குப் பிறகு தீப்பற்றியிருக்கலாம் என்பதுபோலவும், அதனால், வேண்டுமென்றே தான் காட்டைக் கொளுத்தவில்லை என்றும் அந்த பெண் கூறியுள்ளார்.
ஆனால், தீப்பற்றிய இடத்தில் அவர் சந்தேகத்துக்குரிய வகையில் நடமாடியதாகவும், அத்து மீறி நுழைந்ததாகவும் கண்ணால் பார்த்தவர்கள் சாட்சியமளித்துள்ளார்கள்.
தீயணைப்பு வீரர்களைப் பார்த்ததும், தான் நீரிழப்பால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தனக்கு மருத்துவ உதவி தேவை என்றும் கூறியுள்ளார் அவர்.
அவரிடம் சிகரெட் லைற்றர் ஒன்று இருந்ததை அவரைக் கைது செய்த அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளார்கள்.
தன் மீதான குற்றச்சாட்டை Alexandra மறுத்தாலும், அதிகாரிகள் அவர்தான் தீவைத்ததாக நம்புகிறார்கள். அத்துடன், மாகாணம் முழுவதிலும் பல்வேறு இடங்களில் தீவைத்ததும் அவர்தான் என்ற சந்தேகமும் எழுத்துள்ளது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் Alexandra ஒன்பது ஆண்டுகள் வரை சிறை செல்ல நேரிடலாம்.
Alexandra ஒரு முன்னாள் வனவியல் மாணவி, பல்வேறு துறைகளில் பட்டம் பெற்றுள்ளார். அவர் தன்னை ஒரு யோகா ஆசிரியை என்றும் ஆவிகளுடன் பேசுபவர் என்றும் கூறியுள்ளார்.