கணவரின் நண்பருக்கு எதிராக வாடகை கொலையாளிகளை ஏவிய பெண்: அம்பலமான பகீர் சம்பவம்
இந்திய மாநிலம் கேரளாவில் காவல்துறை அதிகாரியான கணவரின் நண்பருக்கு எதிராக வாடகை கொலையாளிகளை ஏவிய வங்கி அதிகாரியான பெண்மணி கைதாகியுள்ளார்.
கேரள வங்கி கண்ணூர் கிளையில் பணியாற்றி வந்த 52 வயதான என்.வி.சீமா என்பவரே பரியாரம் பகுதி பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சீமா அளித்திருந்த முன் ஜாமீன் மனு மாவட்ட நீதிமன்றம் நிராகரித்த நிலையில், குடியிருப்புக்கு சென்ற பொலிசார் அவரை கைது செய்துள்ளனர். கட்டுமான ஒப்பந்ததாரராக தொழில் செய்து வரும் 55 வயதான சுரேஷ் பாபு என்பவர் கும்பல் ஒன்றால் தாக்கப்பட்ட சம்பவத்தில் பொலிஸ் முன்னெடுத்த விசாரணையிலேயே தாக்குதல்தாரிகளை ஏவியது பெண் என தெரிய வந்தது.
பொலிஸ் அதிகாரியான கணவரின் நண்பரும், அண்டைவீட்டாரும், உறவினருமான சுரேஷ் பாபுக்கு எதிராக 3 லட்சம் ரூபாய் செலவிட்டு வாடகை கொலையாளிகளை சீமா ஏவியுள்ளார்.
இந்த நிலையில் சுரேஷ் பாபு காயங்களுடன் தப்ப, அவரை தாக்கிய ஐவர் கும்பல் பொலிசாரால் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் மேற்கொண்ட விசாரணையிலேயே சீமா இந்த விவகாரத்தில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
கடன் வாங்கிய பணத்தை திருப்பி தராமல் காலதாமதம் செய்து வருவதாலும், கணவரை தவறான பாதைக்கு இட்டுச்செல்வதாகவும் கூறி வாடகை கொலையாளிகளுக்கு பணம் அளித்துள்ளார்.
ஏப்ரல் 18ம் திகதி சுரேஷ் பாபுவின் குடியிருப்புக்கு அத்துமீறி நுழைந்த நால்வர் கும்பல், கொடூரமாக வாளால் தாக்கிவிட்டு மாயமாகியுள்ளது.
தற்போது இந்த வழக்கில் கைதாகியுள்ள சீமா, நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார்.