பல நாட்களாக மாயமான பெண்... பொலிஸ் வாகனத்தில் சடலமாக மீட்பு: குடும்பத்தினர் வைத்த கோரிக்கை
அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தில் 12 நாட்களாக மாயமான பெண் ஒருவர், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பொலிஸ் வாகனத்தில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் குடும்பத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அலபாமா மாகாணத்தின் Huntsville பகுதியிலேயே குறித்த சம்பவம் நடந்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பில் Huntsville பொலிசார் தெரிவிக்கையில், 29 வயதான கிறிஸ்டினா நான்ஸ் சடலமானது பயன்பாடின்றி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பொலிஸ் வாகனத்தில் இருந்து அக்டோபர் 7ம் திகதி கண்டெடுக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளனர்.
அந்த வாகனமானது காவல்துறைக்கு சொந்தமான வாகன நிறுத்தப் பகுதியிலேயே நிறுத்தப்பட்டிருந்தது. செப்டம்பர் 25ம் திகதியில் இருந்தே நான்ஸ் குடியிருப்புக்கு திரும்பவில்லை எனவும், அவரை தொடர்பு கொள்ள முயன்றும் ஏமாற்றமே மிஞ்சியதாகவும் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து அக்டோபர் 2ம் திகதி அவரது குடும்பத்தினர் பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளனர். இதன் பிறகு 5 நாட்களுக்கு பின்னரே பொலிஸ் அதிகாரி ஒருவர், குறித்த பெண்மணியின் சடலத்தை பொலிஸ் வாகனத்தினுள் கண்டுள்ளார்.
கண்காணிப்பு கமெராவில் பதிவான காட்சியில், செப்டம்பர் 25ம் திகதி சுமார் 12.30 மணியளவில் அந்த வாகனத்தினுள் நான்ஸ் நுழைவது பதிவாகியிருந்தது. உடற்கூராய்வில் சந்தேகத்திற்கிடமான எதுவும் சிக்கவில்லை எனவும், அவரது மரணம் கொலையாக இருக்கவும் வாய்ப்பில்லை என்றே தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நான்ஸ் மரணம் தொடர்பில் விரிவான விசாரணை முன்னெடுக்க வேண்டும் எனவும் அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாகவும் கூறி குடும்பத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.