நடுவானில் பிரசவ வலி வந்து துடித்த ஆப்கன் பெண்: சமயோகிதமாக செயல்பட்டு உயிரைக் காத்த விமானி
ஆப்கானிஸ்தானிலிருந்து ஜேர்மனி நோக்கி புறப்பட்ட மீட்பு விமானம் ஒன்றில் பயணித்த கர்ப்பிணி ஒருவருக்கு நடுவானில் வைத்து பிரசவ வலி ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்கனை தாலிபான்கள் கைப்பற்றியதைத் தொடர்ந்து, பெரும் எண்ணிக்கையிலான மக்கள் நாட்டை விட்டு வெளியேற போராடி வருகிறார்கள்.
அப்படி ஆப்கன் தலைநகர் காபூல் விமான நிலையத்திலிருந்து ஜேர்மனி நோக்கி புறப்பட்ட அமெரிக்க விமானம் ஒன்றில் பயணித்த கர்ப்பிணிப்பெண் ஒருவருக்கு நடுவானில் திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.
உடனடியாக அந்த விமானத்தின் விமானி விமானத்தை தாழ்வாக பறக்கச் செய்து விமானத்தினுள் காற்றழுத்தத்தை அதிகரிக்கச் செய்துள்ளார். அதனால் அந்த பெண் சீரான உடல் நிலையை அடைந்து உயிர் தப்பியுள்ளார்.
விமானம் ஜேர்மனியிலுள்ள அமெரிக்க விமான தளத்தை அடைந்ததும், தயாராக இருந்த மருத்துவர்கள் விமானத்தில் ஏறி, அந்த பெண்ணுக்கு பிரசவம் பார்த்துள்ளார்கள்.
பின்னர் அந்த பெண் அருகிலுள்ள மருத்துவமனை ஒன்றிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும், தாயும் சேயும் நலமாக இருப்பதாகவும் செய்தித்தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
பதற்றமும் உயிர் பயமும் நிலவும் சூழலில், இந்த செய்தி ஆப்கன் மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் ஒரு விடயமாக அமைந்துள்ளது எனலாம்.