கணவர் கொலையான நிலையில் ஆண் நண்பரை வைத்து தம்பியை வெட்டிய பெண்! அதிர்ச்சி பின்னணி
தமிழகத்தின் திண்டுக்கலில் பெண்ணொருவர் ஆண் நண்பரை வைத்து தனது தம்பியை கொலை செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் குடை பாறைபட்டியை சேர்ந்தவர் சூர்யா(24). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்ம நபர்களால் வெட்டப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த பொலிஸார், விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் சூர்யாவின் சித்தி மகளான மனிஷா(25), அரசியல் பிரமுகர் ஒருவர் தனக்கு காதல் தொல்லை தருவதாகவும், அதனால் கூறி விஷம் குடித்ததாகவும் கூறி அதே மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அதனைத் தொடர்ந்து, மருத்துவர்கள் மனிஷாவை பரிசோதித்தபோது அவர் விஷம் எதுவும் அருந்தவில்லை என்பது தெரிய வந்துள்ளது. அதன் பின்னர் இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார், அப்பெண்ணிடம் விசாரணை நடத்தினர்.
அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால், மனிஷாவின் செல்போனை கைப்பற்றி ஆய்வு செய்ததில், சர்தார் என்பவர் அடிக்கடி பேசி வந்தது தெரிய வந்துள்ளது. அவரை பிடித்து விசாரித்தபோது அதிர்ச்சி தகவல்கள் வெளியானது.
தனது கணவர் சில ஆண்டுகளுக்கு முன்பு கொலை செய்யப்பட்ட நிலையில், தனியாக வசித்து வந்த மனிஷாவுக்கு, சார்தருடன் தகாத உறவு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அறிந்த மனிஷாவின் தம்பி சூர்யா கண்டித்ததால், தனது காதலரிடம் கூறி சொந்த தம்பியையே கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.
அதனைத் தொடர்ந்து, சர்தார் தனது நண்பர்களான யோகராஜ், கவுதம், ரியாஸ் ஆகியோருடன் சேர்ந்து சூர்யா மீது கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ளார். அதில் அதிர்ஷ்டவசமாக சூர்யா உயிர் தப்பியுள்ளார். அதன் பின்னரே மனிஷா தற்கொலை நாடகமாடியுள்ளார்.
இந்நிலையில் சர்தார் மற்றும் அவரது நண்பர்களை கைது செய்த பொலிஸார், மனிஷாவையும் அவருக்கு உதவிய அவரது சகோதரி சீமாதேவியையும் கைது செய்துள்ளனர்.
மேலும், மனிஷாவின் கணவர் கொலை செய்யப்பட்டது குறித்து ரகசிய விசாரணையை பொலிஸார் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. தம்பியை ஆட்களை வைத்து அக்கா கொலை செய்ய முயன்ற சம்பவம் திண்டுக்கலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.