ஊர் முழுக்க கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டப்பட்டு புதைக்கப்பட்ட பெண் மீண்டும் உயிருடன் வந்ததால் அதிர்ச்சி!
மண்ணில் புதைக்கப்பட்ட பெண் உயிருடன் திரும்பிய ஆச்சரிய சம்பவம்.
சந்திராவை பார்த்து பதறியடித்து கொண்டு ஓடிய உறவினர்கள்
தமிழகத்தில் புதைக்கப்பட்ட பெண் மீண்டும் உயிருடன் திரும்பிய சம்பவம் தொடர்பான தலைசுற்றவைக்கும் பின்னணி வெளியாகியுள்ளது.
சென்னை தாம்பரத்தை அடுத்த கூடுவாஞ்சேரியை சேர்ந்தவர் சந்திரா (72). இவர் தனது மகன் வடிவேலு பராமரிப்பில் வசித்து வருகிறார். சந்திரா அடிக்கடி சிங்கப்பெருமாள் அருகே உள்ள கோவிலுக்கு செல்வார்.
வழக்கம்போல நேற்று சந்திரா சிங்கப்பெருமாள் கோவிலுக்கு சென்று வருவதாக வீட்டில் இருந்தவர்களிடம் தெரிவித்துவிட்டு சென்றுள்ளார். காலை 8.30 மணிக்கு செங்கல்பட்டு தாம்பரம் இடையிலான ரயில் தண்டவாளத்தில், கூடுவாஞ்சேரி அருகே வயதான மூதாட்டி ஒருவர் ரயிலில் அடிபட்டு உயிரிழந்துள்ளார்.
இது குறித்த நண்பர்கள் மற்றும் ஊர் மக்கள் மூலமாக தெரியவந்துள்ளது இதையடுத்து அங்கு வந்த வடிவேலு மற்றும் உறவினர்கள் உயிரிழந்தது சந்திரா என தெரிவித்தனர். ஏனெனில் இறந்த பெண்ணின் உருவம் அப்படியே சந்திரா போலவே இருந்தது.
இதனைத் தொடர்ந்து உறவினர்களிடம் சந்திராவின் உடல் ஒப்படைக்கப்பட்டது. சந்திரா உயிரிழந்தது குறித்து, அவருடைய உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் அனைவரும் சந்திராவின் உடலுக்கு, அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
ஊரெங்கும் சந்திராவிற்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டப்பட்டு மாலை இறுதி மரியாதை உடன் தாரை தப்பட்டை வைக்கப்பட்டு, நல்லடக்கம் செய்தனர். இந்நிலையில் வழக்கப்படி சந்திராவிற்கு இன்று காலை படையல் போட்ட பொழுது, உயிரிழந்ததாக நல்லடக்கம் செய்யப்பட்ட சந்திரா உயிருடன் வீட்டிற்கு வந்துள்ளார்.
இதைப் பார்த்து உறவினர்கள் அதிர்ச்சியும், ஆச்சரியமும் அடைந்த நிலையில் சிலர் பயத்தில் ஓட்டம் பிடித்தனர். தகவலறிந்த பொலிசார் சந்திராவிடம் விசாரணை மேற்கொண்டனர்.
வேறொரு பெண்ணின் உடலை தனது தாயுடையது என்று மகன் தவறாக அடையாளம் காட்டியதே இவ்வளவு கூத்துக்கும் காரணம் என்று புரிந்தது.
இந்த நிலையில், இறுதிச் சடங்கு செய்யப்பட்டு புதைக்கப்பட்ட பெண்ணின் உடல் யாருடையது என்று விசாரணை நடைபெற்று வருகிறது.