இளம் பெண் மருத்துவர் தற்கொலை! உயிருக்கு போராடும் தாயார்
வெளிநாட்டில் மருத்துவ கல்வியை முடித்துவிட்டு தமிழக மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வந்த இளம்பெண் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
பெண் மருத்துவர்
தேனி மாவட்டம் லட்சுமிபுரத்தை சேர்ந்தவர் நாராயணசாமி (62). மனைவி சுமித்ரா. ஒரே மகள் மதுமிதா(26). பிலிப்பைன்ஸில் மருத்துவக்கல்வியை முடித்து விட்டு, தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக பணியாற்றினார்.
மகளின் மருத்துவக்கல்வி மற்றும் புதிதாக வீடு கட்டுவதற்காக நாராயணசாமி ரூ.1 கோடிக்கும் அதிகமாக கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. மேலும் கடந்த ஓராண்டுக்கும் மேலாக அவர் வேலைக்கு செல்லாமல் தொடர்ந்து மது அருந்தி வந்ததாக தெரிகிறது.
காவல்துறை விசாரணை
இதோடு நாராயணசாமி, மனைவி மற்றும் மகளை அடித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் வேதனையடைந்த சுமித்ரா தற்கொலை செய்யப்போவதாக மகளிடம் கூறியபோது அவரும் சம்மதித்தார்.
இதன்படி கடந்த 2 தினங்களுக்கு முன் மதுமிதா பூச்சிக்கொல்லி மருந்தையும், தாய் சுமித்ரா அதிகளவு சர்க்கரை நோய் மாத்திரைகளையும் சாப்பிட்டுள்ளனர். தகவலறிந்த உறவினர்கள் இருவரையும் மீட்டு தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இதில் மதுமிதா நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார். சுமித்ராவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இச்சம்பவம் தொடர்பாக பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.