அதிக வாக்கு வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றி! தமிழகத்தையே திரும்பி பார்க்க வைத்த அந்த நபர் யார்?
தமிழகத்திலேயே 1,34,082 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அனைவரின் புருவங்களையும் உயர்த்த வைத்துள்ளார் ஆத்தூர் திமுக வேட்பாளர் ஐ.பெரியசாமி.
நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில், பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை விட அதிகமான எண்ணிக்கை திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது.
இந்நிலையில், திண்டுக்கல் ஆத்தூர் தொகுதியில் திமுக வேட்பாளர் ஐ.பெரியசாமி 1,34,082 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளார்.
திமுக-வின் முன்னணி தலைவர்களில் ஒருவரான ஐ.பெரியசாமி, தன்னை எதிர்த்து போட்டியிட்ட் அனைவரையும் டெபாசிட் இழக்கச் செய்துள்ளார்.
இதன் மூலம், இந்த தேர்தலில் மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர் என்ற பெருமை ஐ.பெரியசாமிக்கு கிடைத்துள்ளது.
யார் இவர்? மக்கள் அமோக வெற்றி கொடுத்தது ஏன்?
கடந்த 1989ம் ஆண்டு ஆத்தூர் தொகுதியில் முதன் முறையாக ஐ.பெரியசாமி வெற்றிபெற்றார். 1991ம் ஆண்டு தேர்தலில் தோல்வியடைந்த ஐ.பெரியசாமி, 1996ம் ஆண்டு தேர்தலில் வெற்றிபெற்றார்.
மீண்டும் 2001ம் ஆண்டு தேர்தலில் தோல்வியடைந்தார். தொடர்ந்து, 2006, 2011, 2016 மற்றும் தற்போதைய 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிபெற்றுள்ளார்.
மக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளை தன் சொந்த செலவில் கூட செய்து கொடுப்பாராம், மிக எளிதாக மக்கள் இவரை அணுகி தங்களது குறைகளை எடுத்துக் கூறலாம், அந்த அளவுக்கு தொகுதி மக்களிடம் வித்தியாசம் பார்க்காமல் பழக கூடியவர் ஐ.பெரியசாமி.
கட்சி பேதம் ஏதுமின்றி அனைத்து கட்சி நிர்வாகிகளுடன் பேசி பழகும் ஐ.பெரியசாமி, அவர்களது வீட்டு சுப, துக்க நிகழ்ச்சிகளில் தவறாமல் கலந்து கொள்வாராம்.
இப்படி பாகுபாடு பார்க்காமல், மிக எளிமையாக மக்களுக்கு தொண்டு ஆற்றும் குணமே இவரை அதிக வாக்கு வித்தியாசத்தில் ஜெயிக்க வைத்தது என நெகிழ்கிறார்கள் தொண்டர்கள்.