ஜேர்மனி செல்லும் கனவில் விமானநிலையம் வந்த நாதஸ்வர கலைஞர்கள்! புரோகிதரால் சுக்குநூறான பரிதாபம்.. எச்சரிக்கை செய்தி
ஜேர்மனியில் வேலை செய்ய போகிறோம் என்ற கனவில் விமான நிலையம் சென்ற நாதஸ்வர கலைஞர்கள் மோசடிக்கு உள்ளானது தொடர்பான அதிர்ச்சி சம்பவம் அம்பலமாகியுள்ளது.
தமிழகத்தின் மயிலாடுதுறையை சேந்தவர் பூரணச்சந்திரன். புரோகிதரான இவர் அப்பகுதியை சேர்ந்த இசைக்கலைஞர்களிடம் பழகியுள்ளார். அப்போது நாதஸ்வரம் மற்றும் தவில்வித்வான் பணிகளுக்கு ஜேர்மனியில் அதிக வேலை இருப்பதாகவும், அதில் வருமானம் கொட்டும் எனவும் கூறினார்.
இதையடுத்து பாஸ்போர்ட், விசா இதர செலவுகளுக்கு என மொத்தமாக 26 பேரிடம் ரூ.54 லட்சம் பணம் வாங்கினார் பூர்ணச்சந்திரன். பணம் கொடுத்தவர்களை நம்ப வைப்பதற்காக விசா உள்ளிட்டவற்றை போலியாக தயார் செய்து கொடுத்திருக்கிறார்.
பணம் கொடுத்த 26 பேரில் முதற்கட்டமாக 15 பேரை ஜேர்மனிக்கு அழைத்து செல்வதற்காக விமான நிலையத்திற்கு அவர்களை கூட்டி சென்றார். அவர்களும் ஜேர்மனிக்கு செல்வதாக குடும்பத்தாரிடம் சொல்லிவிட்டு பல கனவுகளுடன் சென்றனர்.
அப்போது விமான நிலையத்தில் வந்துவிடுவதாக சொல்லி வெளியே சென்ற பூர்ணச்சந்திரன் வெகுநேரமாக வராததால் அவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர்களின் விசாவை விமான நிலைய அதிகாரிகள் சோதனை செய்த போது அது போலி என தெரிந்தது.
இதையடுத்து 15 பேரும் அதிர்ச்சியில் உறைந்தனர். இது தொடர்பான புகாரின் பேரில் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த பொலிசார், தனிப்படை அமைத்து தேடி வந்த நிலையில், சென்னை பூந்தமல்லி தனியார் விடுதியில் தங்கியிருந்த பூர்ணச்சந்திரனை கைது செய்து 12 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.
அவர் மலேசியாவிற்கு கிளம்ப தயாரானதும் தெரியவந்தது. தொடர்ந்து அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.