உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி! மீண்டும் மழையால் ரத்தான 4ஆம் நாள் ஆட்டம்.. தொடர்ந்து எடுக்கப்பட்ட அதிரடி முடிவு
இந்தியா - நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் மழை காரணமாக கைவிடப்பட்ட நிலையில் டிக்கெட் விலை குறைக்கப்பட்டுள்ளதோடு, 6ஆம் நாள் ஆட்டம் சேர்க்கப்பட்டுள்ளது.
இந்தியா- நியூஸிலாந்து அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டி இங்கிலாந்தின் சவுத்தாம்டன் நகரில் நடந்து வருகிறது. இதில் ஏற்கெனவே முதல் நாள் ஆட்டம் முழுவதும் மழையால் கைவிடப்பட்டது.
இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட்டுகளுக்கு 146 ரன்கள் எடுத்திருந்தது. மூன்றாம் நாள் ஆட்டத்தில் இந்திய அணி வீரர்களால் நியூஸிலாந்தின் வேகப்பந்து வீச்சை சமாளிக்க முடியவில்லை.
தொடர் விக்கெட்டுகள் சரியவே மொத்தம் 217 ரன்களுக்குத் தனது முதல் இன்னிங்ஸை இந்திய அணி நிறைவு செய்தது.
தொடர்ந்து ஆடிய நியூஸிலாந்து அணி மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 101 ரன்களை எடுத்திருந்தது. ஆட்டம் நடந்த இரண்டு நாட்களுமே ஒளி மங்கியதாலும், மழையாலும் ஆட்டம் தடைப்பட்டு வந்தது.
இந்நிலையில் கனமழை காரணமாக நான்காம் நாள் ஆட்டம் நடக்குமா என்ற கேள்வி எழுந்தது. மழையின் தீவிரம் சற்று குறைந்தாலும் மிதமான மழையின் காரணமாக மைதானத்தில் தேங்கியிருந்த தண்ணீர் வடிந்தபாடில்லை.
உணவு இடைவேளை, தேநீர் இடைவேளை என நேரம் கடந்துகொண்டே வந்ததால் ஒரு கட்டத்தில் 4ஆம் நாள் ஆட்டம் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
தொடக்க நாள் ஆட்டம் கைவிடப்பட்டதை நிகா் செய்யும் விதமாக அடுத்த 4 நாள் ஆட்டங்களையும் அரை மணி நேரம் முன்னதாகவே தொடங்க முடிவு செய்யப்பட்டது. எனினும் அதற்கும் வானிலை தடையாகவே இருந்து வருகிறது. இதனால், ‘ரிசா்வ் டே’-ஆக 6-ஆவது நாள் ஆட்டம் போட்டியில் சோ்க்கப்பட்டுள்ளது.
விலை குறைப்பு: 6-ஆம் நாள் ஆட்டத்துக்கான டிக்கெட்டுகள் விலையை ஐசிசி குறைத்துள்ளது. ரூ.15,444; ரூ.10,296; ரூ.7,722 ஆகிய விலைகளில் இருந்த டிக்கெட்டுகள் தற்போது முறையே, ரூ.10,296; ரூ.7,722; ரூ.5,148 என்ற அளவுக்கு குறைக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் அவ்வாறு விலைகள் குறைக்கப்படும் விதிகளின் அடிப்படையில் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக ஐசிசி தெரிவித்துள்ளது.
இந்த போட்டி டிராவில் முடிந்தால்
மழை காரணமாக தொடா்ந்து பாதிக்கப்பட்டு வரும் நிலையில், இந்த இறுதி ஆட்டம் டிரா ஆவதற்கான வாய்ப்புகள் அதிகம் என கணிக்கப்படுகிறது.
அவ்வாறு ஆட்டம் டிரா ஆகும் பட்சத்தில் சாம்பியன்ஷிப் பட்டம் இரு அணிகளுக்கும் பகிா்ந்தளிக்கப்படும். அடுத்த சாம்பியன் முடிவாகும் வரை (2023), சாம்பியன்ஷிப் கதை (மேஸ்) இந்தியாவிடம் ஓராண்டு, நியூஸிலாந்திடம் ஓராண்டு இருக்கும்.
முதல் இரு இடங்களுக்கான பரிசுத் தொகை சோ்க்கப்பட்டு இரு அணிகளுக்கும் இரண்டாக பிரித்து வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.