முயல் திருடனை வலைவீசி தேடிவரும் பிரித்தானிய பொலிஸ்! என்ன காரணம்?
உலகின் மிகப்பெரிய முயலை திருடிச்சென்ற திருடர்களை பிரித்தானிய பொலிஸார் வலைவீசி தேடி வருகின்றனர்.
டேரியஸ் என்ற அந்த பிரவுன் மற்றும் வெள்ளை நிற முயல் உலகின் மிகப் பெரிய முயல் என்ற சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மத்திய இங்கிலாந்தின் Stoulton-ல் வசிக்கும் Annette Edwards என்பவருக்கு சொந்தமான அந்த முயல், கடந்த சனிக்கிழமை இரவு அவரது வீட்டு தோட்டத்தில் மேய்ந்துகொண்டிருந்தபோது திருடு போனதாக West Mercia பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Continental Giant rabbit இனத்தை சேர்ந்த இந்த முயல் 2010-ஆம் ஆண்டு உலகின் மிகப் பெரிய வாழும் முயல் என கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றது. இது 4 அடி 3 அங்குலங்கள் (129 சென்டிமீட்டர்) நீளம் கொண்டது.
Annette Edwards தனது ட்விட்டர் பக்கத்தில், டேரியஸை பத்திரமாக மீட்டு கொடுப்பவருக்கு 1,000 பவுண்ட் சன்மானம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
அவர் தனது ட்வீட்டில் "இது எனக்கு மிகவும் சோகமான நாள்" என்றும் "டேரியஸுக்கு மிகவும் வயதாகிவிட்டது, அதனால் தயவுசெய்து அவனை திரும்ப கொடுத்துவிடுங்கள்" என வேண்டுகோள் வைத்துள்ளார்.
டேரியஸுக்கு தற்போது 11 வயது ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், திருடர்களை கண்டுபிடித்து முயலை மீட்டுக் கொடுக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். உலக சாதனைப் படைத்த முயல் திருடப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.