பானிபூரி சாப்பிட்ட அரைமணி நேரத்தில் தொடர் வாந்தி! அடுத்தநாள் உயிரிழந்த பட்டதாரி இளம்பெண்... எச்சரிக்கை செய்தி
தமிழகத்தில் பானிபூரி சாப்பிட்ட பட்டதாரி இளம்பெண் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு என்.ஜி.ஜி.ஓ. காலனி காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் கல்யாண சுந்தரம், இவரது மகள் ரோகிணி தேவி. பட்டதாரி இளம்பெண்ணான இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.
நேற்று முன்தினம் ரோகிணி தேவிக்கு அவரது அண்ணன்கள் பாலமுருகன், யுவராஜ் ஆகியோர் பானிபூரி வாங்கி கொண்டு வந்தனர். இதை சாப்பிட்ட ரோகிணி தேவி அரைமணி நேரத்தில் வாந்தி எடுத்து உள்ளார்.
பின்னர் ரோகிணி தேவி எலக்ட்ரோல் பவுடரை தண்ணீரில் கலந்து குடித்து விட்டு இரவில் படுக்க சென்றார். தொடர்ந்து நேற்று காலை 7.30 மணியளவில் வழக்கம் போல் எழுந்தார். அப்போது குளியல் அறைக்கு சென்று விட்டு திரும்பி வந்த ரோகிணி சோர்வாக காணப்பட்டார்.
இதையடுத்து மருத்துவமனைக்கு அவரை அழைத்து செல்ல முடிவு செய்தனர். அப்போது திடீரென ரோகிணி மயக்கம் அடைந்தார். இதையடுத்து ஆம்புலன்ஸ் முலம் அவரை ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
ரோகிணி ஆபத்தான நிலையில் இருந்ததால் அவரை சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே ரோகிணி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதையடுத்து ரோகிணியின் தந்தை கல்யாண சுந்தரம் வீரப்பன் சத்திரம் பொலிசில் புகார் செய்தார். அதில் பானிபூரி சாப்பிட்டு சிறிது நேரத்தில் தனது மகள் வாந்தி எடுத்ததாகவும், அதை தொடர்ந்து அவர் இறந்து விட்டதாகவும் தெரிவித்து இருந்தார். புகாரின் பேரில் பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பொலிசார் கூறுகையில், பெண்ணின் உறவினர்கள் பானிபூரி சாப்பிட்டதால் இறந்து விட்டதாக தெரிவித்து உள்ளனர். எனவே பிரேத பரிசோதனை அறிக்கையில் வரும் தகவலின் அடிப்படையில் மேல்விசாரணை நடத்தப்படும். மேலும் பானிபூரி எந்த கடையில் வாங்கப்பட்டது என்பது குறித்தும் விசாரணை நடத்தப்படும் என கூறியுள்ளனர்.