உங்கள் மகள் இறந்துவிட்டார்! வெளிநாட்டில் இருந்து கணவர் திரும்பியதும் மனைவி குடும்பத்துக்கு வந்த போன்
திருமணமான ஒரு ஆண்டில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் நிலையில் அவர் கொலை செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
திருமணத்திற்கு பின் வெளிநாடு சென்ற கணவர்
தமிழகத்தின் தூத்துக்குடியை சேர்ந்த பிரசாத் (32) என்பவருக்கும் அனிஷா (25) என்ற பெண்ணிற்கும் ஓராண்டுக்கு முன்னர் திருமணம் நடந்தது. பின்னர் பிரசாத் மனைவியை தனது பெற்றோரிடம் விட்டு விட்டு, குவைத்துக்கு சென்றார்.
திருமணத்தின் போது 70 சவரன் நகை மற்றும் ரூ.4 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை வரதட்சணையில் முதல் தவணையாக அனிஷா தந்தை கில்பர்ட் கொடுத்துள்ளார். மீதி 30 சவரன் நகையை சில மாதங்களில் கொடுத்து விடுவதாக உறுதியளித்துள்ளார். திருமணம் ஆகியும் சில மாதங்கள் ஆகியும், கில்பர்ட் சொன்னபடி 30 சவரன் நகையை போடவில்லை என கூறப்படுகிறது.
மகள் தூக்குப்போட்டு கொண்டார்
இதற்கிடையே, அனிஷாவின் பெற்றோர் தங்களது மகளை வாரத்திற்கு ஒரு முறையாவது தங்களது வீட்டிற்கு அனுப்பி வைக்குமாறு பிரசாத்தின் பெற்றோரிடம் கூறியுள்ளனர். ஆனால், அதற்கு அவர்கள் மறுப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் வெளிநாட்டில் இருந்து பிரசாத் சமீபத்தில் ஊருக்கு வந்தார்.
நேற்று முன் தினம் கில்பர்ட் குடும்பத்தாருக்கு வந்த போனில், உங்களது மகள் தூக்குப்போட்டு கொண்டதால் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர் என்று கூறியுள்ளனர்.
இதனால் பதறியடித்து அனிஷா குடும்பத்தார் மருத்துவமனை சென்ற நிலையில் உங்கள் மகள் இறந்துவிட்டார் என கூறினர். இதையடுத்து குடும்பத்தாரும், உறவினர்களும் அனிஷாவை பிரசாத் குடும்பத்தார் கொலை செய்துவிட்டனர் எனவும் அவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளதாகவும் குற்றஞ்சாட்டி போராட்டம் நடத்தினர்.
அவர்களிடம், உதவி ஆட்சியர் கவுரவ்குமார் மற்றும் பொலிசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பின்னர் இதுதொடர்பாக உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.