அழகிப்போட்டியில் பட்டம் வென்ற தமிழ்ப்பெண்! குடும்ப வறுமையை மீறி சாதனை
வறுமையை வென்று அசத்திய தமிழ்ப்பெண்.
மிஸ் தமிழ்நாடு அழகிப்போட்டியில் பட்டத்தை வென்று சாதனை.
வறுமையில் வாடிய கூலி தொழிலாளி ஒருவரின் மகள் மிஸ் தமிழ்நாடு அழகிப்போட்டியில் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்தவர் மனோகர். இவரது மகள் ரக்சயா(20). கல்லூரி படிப்பை முடித்துள்ள இவருக்கு சிறுவயது முதலே அழகிப் போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்ற லட்சியம் இருந்தது. குடும்ப வறுமையை பொருள்படுத்தாமல், பகுதி நேர வேலை செய்து தன்னை தயார் படுத்திக் கொண்டார்.
கடந்த 2018ம் ஆண்டு நடந்த 'மோனோ ஆக்டிங்' நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றார். இதற்காக அவர், அரசு சார்பில் மலேசியா அழைத்து செல்லப்பட்டு கெளரவிக்கப்பட்டார். இதனையடுத்து கடந்த பிப்ரவரி மாதம் பார் எவர் ஸ்டார் இந்தியா அவார்ட்ஸ் நடத்திய மாவட்ட அளவிலான அழகிகள் போட்டியில் வெற்றிபெற்றார்.
பின்னர் மாநில அளவிலான போட்டியில் கலந்து கொண்டார். ஜெய்ப்பூரில் இந்த மாதம் 18-ஆம் தேதி முதல் 21-ஆம் தேதி வரை நடந்த போட்டியில் நாடு முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். இதில், மிஸ் தமிழ்நாடு பட்டத்தை வென்று ரக்சயா சாதனை படைத்துள்ளார்.
அதே போல் அனைத்து மாநிலங்களிலும் வின்னர், ரன்னர் என சுமார் 750 பேர் இறுதிப் போட்டிக்கு தேர்வாகியுள்ளனர். மேலும் வருகிற டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள 'மிஸ் இந்தியா' அழகி போட்டியில் இவர்கள் பங்கேற்க உள்ளனர்.
இதில் தேர்வாகும் நபர், 'மிஸ் இந்தியா' பட்டத்தை வெல்வார். ரக்சயாவின் பெற்றோர் கூறுகையில், எங்கள் மகள் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றி வந்தார்.
எங்கள் குடும்பம் வறுமையில் இருந்த நிலையில் சிலர் ரக்சயாவின் கல்விக்கு உதவினார்கள்.
தனது விடாமுயற்சியால் இந்த சாதனையை அவர் செய்துள்ளார் என மகிழ்ச்சியுடன் கூறியுள்ளனர்.