குழந்தையின் தந்தை எங்கே? கேட்கப்பட்ட ஒரு கேள்வியால் உயிரை விட்ட இளம்பெண் மருத்துவர்
தமிழகத்தில் கணவரை விவாகரத்து செய்துவிட்டு வாழ்ந்து வந்த இளம்பெண் மருத்துவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருச்சி, சுப்பிரமணியபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சஞ்ஜினி (30). தஞ்சை அரசு மருத்துவமனையில் மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல மருத்துவராக பணியாற்றி வந்தார்.
ஐந்து ஆண்டுகளுக்கு முன், துறையூரைச் சேர்ந்த மருத்துவர் கோகுல் (37) என்பவருடன் திருமணம் நடந்து, ஒரு வயதில் ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் தம்பதியிடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதன் காரணமாக இருவரும் சமீபத்தில் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.
இதன்பின்னர் சஞ்ஜினி மகனுடன் திருச்சி சுப்பிரமணியபுரத்தில் உள்ள தனது தாத்தாவான பிரபல டாக்டர் கோவிந்தராஜ் (81) என்பவருடன் வசித்து வந்தார். இவர் விவாகரத்து செய்தது அதிக உறவினர்களுக்கு தெரியாது.
இந்த நிலையில் சஞ்ஜினி தனது மகனுக்கு திருச்சி மத்திய பஸ்நிலையம் அருகே உள்ள ஒரு ஓட்டலில் நேற்று முன்தினம் காதுகுத்து விழா நடத்தினார். இதில் அவரது உறவினர்கள் மட்டுமின்றி, நண்பர்கள், தோழிகள் குடும்பத்துடன் பங்கேற்றனர். கணவர் மட்டும் பங்கேற்கவில்லை.
அப்போது, விழாவிற்கு வந்த சிலர் சஞ்ஜினியிடம் குழந்தையின் தந்தை எங்கே? என கேட்டனர். இது அவருக்கு மிகுந்த மனஉளைச்சலை ஏற்படுத்தியதாக தெரிகிறது. இதனையடுத்து விழா முடிந்ததும் சஞ்சினி குழந்தையை அழைத்துக்கொண்டு வீட்டுக்கு வந்த சஞ்சினி குழந்தையை தனது தாத்தாவிடம் கொடுத்துவிட்டு தனது அறைக்குள் சென்றுவிட்டார்.
நேற்று காலையில் சஞ்ஜினியின் அறை நீண்ட நேரமாக திறக்கப்படாமல் இருந்தது. இதையடுத்து ஜன்னல் வழியாக தாத்தா பார்த்த போது உள்ளே சஞ்சினி மின்விசிறியில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இதை பார்த்த கோவிந்தராஜ் அதிர்ச்சியில் கதறி துடித்தார். சம்பவம் குறித்து தகவலறிந்த பொலிசார் அங்கு வந்து சடலத்தை கைப்பற்றிவிட்டு விசாரணை நடத்தினர்.
முதல் கட்ட விசாரணையில், மகனின் காதுகுத்துவிழாவின்போது கணவரை பற்றி சிலர் கேட்டதால் ஏற்பட்ட மனஉளைச்சலில் அவர் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இது தொடர்பாக மேலும் தீவிர விசாரணை நடைபெற்று வருகின்றது.