நள்ளிரவு 2 மணிக்கு தொடர்ந்து குரைத்த வீட்டு நாய்! 20 வயது மகளை தேடி கரும்பு தோட்டத்திற்கு சென்ற தாயார் கண்ட அதிர்ச்சி காட்சி
இந்தியாவில் நள்ளிரவில் வீட்டிலிருந்து வெளியில் வந்த இளம்பெண் கரும்பு தோட்டத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தின் அதிர்ச்சி பின்னணி வெளியாகியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலத்தின் கோபா கிராமத்தை சேர்ந்தவர் பிரியங்கா (20). இவர் இரு தினங்களுக்கு முன்னர் நள்ளிரவு 2 மணிக்கு வீட்டிலிருந்து மாயமாகியுள்ளார். அப்போது வீட்டில் இருந்த நாய் தொடர்ந்து குரைத்து கொண்டிருந்தது, அங்கிருந்து 20 அடி தூரத்தில் உள்ள கரும்பு தோட்டத்தை நோக்கி சென்றபடியும், மீண்டும் வீட்டுக்கு திரும்பியபடியும் நாய் இருந்தது.
இதையடுத்து குடும்பத்தார் தூக்க கலக்கத்தில் எழுந்து நாய் ஏன் இப்படி கத்துகிறது என பேசியவாறு மீண்டும் தூங்கிவிட்டனர். இந்த நிலையில் காலையில் தூங்கி எழுந்த போது பிரியங்கா வீட்டில் இல்லாததை கண்டு அவர் தாய் அதிர்ச்சியடைந்தார்.
பின்னர் அவர் கரும்பு தோட்டத்துக்கு சென்ற போது உடல் முழுவதும் இரத்தம் கொட்டிய நிலையில் பிரியங்கா சடலமாக கிடந்தார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த தாயார் பொலிசுக்கு தகவல் கொடுத்தார்.
சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் சடலத்தை கைப்பற்றிவிட்டு விசாரணையை தொடங்கினர். விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்த நிலையில் இந்த கொலை தொடர்பில் நவ் பஹர் சிங் மற்றும் ரோஹித் குமார் என்ற இரண்டு இளைஞர்களை பொலிசார் கைது செய்துள்ளனர்.
பொலிசார் கூறுகையில், பிரியங்காவும், பஹரும் காதலித்து வந்தனர், இதையடுத்து தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு பஹரை பிரியங்கா வலியுறுத்தி வந்தார். ஆனால் நாம் இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள், அதனால் நான் உன்னை திருமணம் செய்து கொள்ளமுடியாது என பஹர் கூறியிருக்கிறார்.
இதனால் இருவருக்கும் சண்டை ஏற்பட்ட நிலையில் பிரியங்காவை கொல்ல பஹர் முடிவெடுத்தார்.
அதன்படி சம்பவத்தன்று நள்ளிரவு தந்திரமாக மயக்கி பேசி பிரியங்காவை தனியாக அழைத்து சென்று கத்தியால் சரமாரியாக குத்தியும், கழுத்தை நெரித்தும் கொலை செய்துள்ளனர்.
பின்னர் தனது நண்பர் ரோஹித் உதவியுடன் சடலத்தை கரும்பு தோட்டத்தில் தூக்கி போட்டார் என கூறியுள்ளனர்.