ஆன்லைன் வகுப்பின் போது தொடர்ந்து வந்த ஆபாச படங்கள்! விசாரணையில் மாணவிகள், ஆசிரியைகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி
தமிழகத்தில் ஆன்லைன் வகுப்பின் போது தொடர்ந்து ஆபாச புகைப்படங்கள், மெசேஜ்கள் வந்த நிலையில் விசாரணையில் தெரிந்த தகவலால் மாணவிகள், ஆசிரியைகள் அதிர்ச்சியடைந்தனர்.
தமிழகம் முழுவதும் கொரோனா பெருந்தொற்று ஊரடங்கு காரணமாக தொடர்ந்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள் செயல்படாமல் உள்ளன.
இந்த நிலையில் மாணவ-மாணவிகளின் கல்வியை கருத்தில் கொண்டு ஆன்லைன் மூலமாக வகுப்புகளை எடுக்க தமிழக அரசு முடிவெடுத்து கடந்த ஓராண்டிற்கு மேலாக ஆன்லைன் மூலமாக பள்ளி மாணவ மாணவிகளுக்கு வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நகர பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியான ஸ்ரீ சண்முகா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு வகுப்பு வாரியாக ஆன்லைன் மூலமாக பாடத்திட்ட வகுப்புகள் எடுக்கப்படுகின்றன.
ஒன்பதாம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் எடுக்கப்பட்டு வந்துள்ளன. இதனிடையே அந்த ஆன்லைன் வகுப்புகளில் போலியாக மாணவி பெயரில் ஒருவர் இணைந்துள்ளார்.
அவர் ஆன்லைன் வகுப்பில் கலந்துகொள்ளும் மாணவிகளுக்கும் வகுப்பு எடுக்கும் ஆசிரியர்களுக்கும் ஆபாச செய்திகளையும், படங்களையும் தொடர்ந்து அனுப்பி வந்துள்ளார். இதனை அறிந்த பள்ளி நிர்வாகம் பொலிசில் புகார் கொடுத்தது.
புகாரின் அடிப்படையில் தனிப்படை அமைத்து சைபர் செல் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து ஆன்லைன் மூலமாக மாணவிகளுக்கு ஆபாச செய்திகள் அனுப்பிய மர்ம நபர் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில் மாணவிகளுக்கு ஆபாச செய்திகள் அனுப்பியவர் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த மோகன்குமார் (26) என்பது கண்டறியப்பட்டது.
இதனையறிந்த பாதிக்கப்பட்ட மாணவிகள், ஆசிரியைகள் அதிர்ச்சியடைந்தனர்.
உடனடியாக விரைந்து செயல்பட்ட காவல்துறையினர் மோகன்குமாரை கைது செய்து தகவல் தொழில்நுட்ப சட்டம், சிறுமிகளுக்கு எதிரான பாலியல் தண்டனை சட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தார்கள்.