காமன்வெல்த் போட்டிகளில் இருந்து10 இலங்கையர்கள் மாயம்: பிரித்தானியாவிலேயே தங்கிவிட முயற்சியா.!
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இருந்து 10 இலங்கையர்கள் காணாமல் போயுள்ளனர் என அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
பர்மிங்காமில் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க, பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட இலங்கை நாட்டிலிருந்து வந்த குழுவின் பத்து உறுப்பினர்கள் பிரித்தானியாவிலேயே தங்கிவிடலாம் என்ற சந்தேகத்திற்குரிய முயற்சியில் காணாமல் போயுள்ளனர் என்று இலங்கை நாட்டின் உயர் விளையாட்டு அதிகாரி தெரிவித்துள்ளார்.
ஒன்பது தடகள வீரர்களும் ஒரு மேலாளரும் தங்கள் நிகழ்வுகளை முடித்த பிறகு காணாமல் போனார்கள் என்று பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரி கூறியுள்ளார்.
"வேலைவாய்ப்பைப் பெற அவர்கள் இங்கிலாந்தில் இருக்க விரும்புவதாக நாங்கள் சந்தேகிக்கிறோம்." என்று அவர் கூறினார்.
160 பேர் கொண்ட இலங்கைக் குழுவின் நிர்வாகம் அனைத்து உறுப்பினர்களின் கடவுச்சீட்டுகளையும் பறிமுதல் செய்து அவர்கள் தாயகம் திரும்புவதை உறுதிப்படுத்திக் கொண்டது. இருப்பினும், அது சிலரை வெளியேற விடாமல் தடுக்க முடியவில்லை. இப்போது புதிதாக 7 பேர் வெளியேறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக காணாமல் போன முதல் மூவரை பிரித்தானிய பொலிசார் கண்டுபிடித்தனர், ஆனால் அவர்கள் உள்ளூர் சட்டங்களை மீறவில்லை மற்றும் ஆறு மாதங்களுக்கு செல்லுபடியாகும் விசாக்களை வைத்திருந்தனர் என்பதால், அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று இலங்கை அதிகாரி தெரிவித்தார்.
கடந்த காலங்களில் சர்வதேச போட்டிகளில் இலங்கை விளையாட்டு வீரர்கள் காணாமல் போன சம்பவங்கள் நடந்துள்ளன.
கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம், இலங்கையின் மல்யுத்த முகாமையாளர் தனது அணியை கைவிட்டு ஒஸ்லோவில் உலக சம்பியன்ஷிப் போட்டியின் போது காணாமல் போனார்.
2014-ஆம் ஆண்டு தென் கொரியாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியின் போது, இலங்கையைச் சேர்ந்த இரண்டு வீராங்கனைகள் ஓட்டம் பிடித்தனர், அவர்கள் கண்டுபிடிக்கப்படவில்லை.
மேலும் 2004-ஆம் ஆண்டு இலங்கையில் தேசிய கரப்பந்தாட்ட அணி என்று ஒன்று இல்லாத நிலையிலும், 23 பேர் கொண்ட குழு நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாக பாவனை செய்து ஜேர்மனியில் நடைபெற்ற போட்டித் தொடரில் கலந்து கொண்டு காணாமல் போனது.