காபூல் விமான நிலையத்தில் மீண்டும் தைரியமாக வேலைக்கு திரும்பிய 12 பெண்கள்!
ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றி ஒரு மாதம் முடிவதர்க்குள், பெரும் அச்சத்திற்கு நடுவே 12 பெண்கள் காபூல் விமான நிலையத்திற்கு பணிக்கு திரும்பியுள்ளனர்.
தாலிபான்கள் ஆப்கானிஸ்தானை முழுமையாக கைப்பற்றும் முன்பு, காபூல் விமான நிலையத்தில் 80-க்கும் மேற்பட்ட பெண்கள் பணியில் இருந்ததாக கூறப்படுகிறது.
ஆனால், இப்போது கடும்போக்குவாதிகளை தைரியமாக எதிர்கொண்டு 12 பேர் மட்டுமே வேலைக்கு திரும்பியுள்ளனர்.
அதில் ராபியா ஜமால் எனும் 35 வயது பெண்மணி, தனது 3 குழந்தைகளுக்காகவும் குடும்ப சூழ்நிலைக்காகவும் பணிக்கு திரும்பியுள்ளதாக கூறியுள்ளார்.
தற்போது இருக்கும் நிலைமை காரணமாக "நான் வீட்டிலும் பதற்றத்தையே உணர்ந்தேன்... குடும்பத்தின் நிலைமை மிகவும் மோசமாக இருப்பதை உணர்ந்தேன், இப்போது பணிக்கு திரும்பிய பிறகு நான் நன்றாக உணர்கிறேன்" என ராபியா ஜமால் கூறியுள்ளார்.
அதேபோல், 5 பிள்ளைகளுக்கு தாயான பெண் ஒருவர், "நான் வேலைக்கு திரும்ப மிகவும் பயந்தேன். ஆனால் எனக்கு வேறு வழி இல்லை, நான் மட்டும் தான் வீட்டில் சம்பாதிக்கிறேன்.
என் குடும்பத்தினரும் என்னை வேலைக்கு திரும்ப வேண்டாம் என எச்சரித்தனர். ஆனால் இப்போது நான் மகிழ்ச்சியாகவும் நிம்மதியாகவும் இருக்கிறேன். இதுவரை எந்த பிரச்சனையும் இல்லை" என்று அவர் கூறினார்.