ஜோ பைடன் நிர்வாகத்துக்கு எதிராக 12 மாகாண அரசுகள் தொடுத்துள்ள வழக்கு! காரணம் என்ன?
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நிர்வாகத்துக்கு எதிராக 12 மாகாண அரசுகள் அதிரடியாக வழக்குகள் தொடுத்துள்ளது.
புவிவெப்ப மயமாதலை 2 டிகிரி செல்சியசுக்கு மிகாமல் கட்டுப்படுத்துவதற்கான பருநிலை மாற்றம் தொடர்பான ஒப்பந்தம் கடந்த 2015-ம் ஆண்டு பாரீசில் நடந்த கூட்டத்தின்போது எட்டப்பட்டது.
சர்வதேச அளவில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள புவிவெப்பமயமாதலை கட்டுப்படுத்த உலக நாடுகள் முயற்சி எடுத்து வருகின்றன.
பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் ஒபாமா ஆட்சியின் கீழ் அமெரிக்கா முதல் நாடாக இணைந்தது. ஆனால் அதன் பின்னர் ஆட்சி பொறுப்புக்கு வந்த டிரம்ப், இந்த ஒப்பந்தம் வளரும் நாடுகளுக்கு ஆதரவாக இருப்பதாக குற்றம் சாட்டினார்.
இதனை காரணம் காட்டி கடந்த 2017-ம் ஆண்டு பாரீஸ் பருவ நிலை ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகுவதாக அவர் அறிவித்தார். இந்த நிலையில், அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் ஜோ பைடன் வெற்றிபெற்று ஜனாதிபதியானார்.
அவர் தனது தேர்தல் பிரசாரத்தின் போதே, தான் ஜனாதிபதியானால் பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் அமெரிக்கா மீண்டும் இணையும் என உறுதி அளித்தார். அதன்படியே அமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக பதவியேற்ற முதல் நாளிலேயே பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் அமெரிக்கா மீண்டும் இணைவதற்கான நிர்வாக உத்தரவில் ஜோ பைடன் கையெழுத்திட்டார்.
இந்தநிலையில் பாரீஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் மீண்டும் இணைந்ததன் மூலம் அமெரிக்காவுக்கு பெரிய அளவில் பொருளாதார இழப்பு ஏற்படும் என கூறி ஜனாதிபதி ஜோ பைடன் நிர்வாகத்தின் மீது 12 மாகாண அரசுகள் கூட்டாக வழக்கு தொடர்ந்துள்ளன.
வரவிருக்கும் 10 ஆண்டுகளில் நூற்றுக்கணக்கான பில்லியன் அல்லது டிரில்லியன் டொலர் சேதத்தை ஏற்படுத்தும்.
இது அமெரிக்காவின் ஒவ்வொரு குடும்பத்தையும் பாதிக்கும் என வழக்கு போடப்பட்டதற்கான காரணமாக கூறப்பட்டுள்ளது.