5 நாட்களில் 9 பேரால் 3 முறை கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 13 வயது சிறுமி! கண்கலங்க வைக்கும் சம்பவம்
இந்தியாவில் 5 நாட்களில் 9 நபர்களால் மூன்று முறை 13 வயது சிறுமி பாலியல்வன்கொடுமைக்குள்ளான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேசத்தின் உமாரியா மாவட்டத்தினைச் சேர்ந்த அந்த 13 வயது சிறுமியை அவருக்கு அறிமுகமான இளைஞர் ஒருவர் கடந்த ஜனவரி 4-ஆம் திகதியன்று கடத்திச் சென்றுள்ளார்.
கடத்திச் சென்ற அச்சிறுமியை அந்த இளைஞரும் அவரின் 6 நண்பர்களும் சேர்ந்து இரண்டு நாட்களாக கூட்டு பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர்.
சிறுமியை இரண்டு நாட்களுக்கு பின்னர் விடுவித்த அந்த கும்பல், இது தொடர்பாக யாரிடமாவது தெரிவித்தால் கொலை செய்துவிடுவதாக மிரட்டியதால் இந்த உண்மையை சிறுமி யாரிடமும் தெரிவிக்காமல் வீட்டுக்கு சென்றுள்ளார்.
இரண்டு நாட்களுக்கு பின்னர் அவளை பாலியல் வன்புணர்வு செய்த 7 பேரில் ஒருவன் மீண்டும் அச்சிறுமியை கடத்திச் சென்று காட்டுப் பகுதியிலும், சாலையோர கடை ஒன்றிலும் வைத்து அவனும் அவனது 3 நண்பர்களும் இணைந்து கூட்டு பாலியல் வன்புணர்வு செய்தனர்.
இதையடுத்து, அச்சிறுமியை அந்த 3 பேரும் தங்கள் பிடியில் இருந்து விடுவித்தனர்.
ஆனால் அச்சிறுமிக்கு ஏற்பட்ட பயங்கரம் அதோடு முடியவில்லை, வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்த சிறுமியை டிரக் டிரைவர்கள் இருவர் மீண்டும் கடத்திச் சென்று பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர்.
அவர்கள் பிடியில் இருந்து தப்பிய சிறுமி வீட்டுக்கு திரும்பி வந்து இது தொடர்பாக பெற்றோரிடம் தெரிவித்த நிலையில் இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே பல்வேறு குழுக்கள் அமைத்த பொலிசார், இதுவரை சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த 6 பேரை கைது செய்து போஸ்கோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.