மழலையர் பாடசாலையில் புகுந்து வெறியாட்டம்: ரத்தவெள்ளத்தில் சரிந்த 18 பேர்
சீனாவில் மழலையர் பாடசாலையில் புகுந்து 18 குழந்தைகளை கத்தியால் தாக்கிய நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
சீனாவின் குவாங்சி ஜூவாங்க் மாகாணத்தில் உள்ள மழலையர் பள்ளிக்குள் புகுந்த மர்ம நபர் கத்தியால் சரமாரியாக தாக்கியுள்ளார்.
இதில் மொத்தம் 18 பேர்களுக்கு கத்திக் குத்து காயம் ஏற்பட்டது. காயமடைந்தவர்கள், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இச்சம்பவத்தில் இரு குழந்தைகள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொலைவெறி தாக்குதல் நடத்திய அந்த நபர் கைது செய்யப்பட்டு, விசாரணை நடந்து வருகிறது. பாடசாலை குழந்தைகள் மீது தாக்குதல் நடத்தும் சம்பவம் சீனாவில் அடிக்கடி நிகழ்கிறது.
மனநலம் பாதிக்கப்பட்ட அல்லது விரக்தியில் உள்ளவர்கள் இந்த தாக்குதல்களில் ஈடுபடுவதாக பொலிசார் கூறுகின்றனர்.
இந்தாண்டு ஜனவரியில் குன்மிங் நகரத்தில் ஏழு பேரை கத்தியால் குத்தி ஒரு மாணவரை பிணைக் கைதியாக பிடித்த 56 வயது நபர் பொலிசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இதேப்போன்று, கடந்த ஆண்டு, குவாங்சி பிராந்தியத்தின் காங்வ் கவுண்டியில் நடந்த கத்திக்குத்து தாக்குதலில் ஒரு பள்ளி பாதுகாப்பு காவலர் கிட்டத்தட்ட 40 பேரைக் காயப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.