பாம்புக்கடி மோசடி... மருத்துவர் உட்பட 17 பேர் கைது
இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தில், விநோதமான மோசடி ஒன்று குறித்து தெரியவந்துள்ள நிலையில், அது தொடர்பில் 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.
பாம்புக்கடி மோசடி...
சத்தீஸ்கர் அரசு, பாம்புக்கடியால் யாராவது உயிரிழந்தால், அவர்கள் குடும்பத்துக்கு 4 லட்ச ரூபாய் வழங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளது.

இந்நிலையில், Beltara தொகுதி சட்டமன்ற உறுப்பினரான சுஷாந்த் ஷுக்லா, Bilaspur மாவட்டத்தில் மட்டும் 431 பேர் பாம்புக்கடிக்கு பலியாகியுள்ளது, மற்றும் அதற்காக 17.24 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ள விவகாரத்தை சட்டமன்றத்தில் எழுப்பியுள்ளார்.
அதைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், பாம்புக்கடி மரணத்துக்காக அரசு நிதி வழங்குவதை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு ஒரு கும்பல் மோசடி செய்துவந்தது தெரியவந்துள்ளது.
அதாவது, ஏதாவது காரணத்தால் இறந்தவர்களின் உடற்கூறு ஆய்வு முடிவையும், பாம்பு கடித்தததால் மரணம் என மாற்றி, அரசு கொடுக்கும் நிதியை மோசடி செய்து வாங்கிவந்துள்ளது அந்த கும்பல்.
அந்தக் கும்பலில் மருத்துவர், மருத்துவ உதவியாளர்கள், வருவாய்த்துறை எழுத்தர்கள், சட்டத்தரணிகள் மற்றும் வங்கி ஊழியர்கள் என பலதரப்பட்டவர்கள் உள்ளனர்.
இந்த மோசடி குறித்து தெரியவந்ததைத் தொடர்ந்து, ஒரு மருத்துவர் உட்பட மொத்தம் 17 பேரை பொலிசார் கைது செய்துள்ளனர். மற்றொரு மருத்துவர் தலைமறைவாகிவிட்டார்.
வழக்கு விசாரணை தொடரும் நிலையில், இந்த வழக்கில் மேலும் பலர் சிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |