பிரான்சில் சொகுசு கப்பலில் வேகமாக பரவும் நோரோ வைரஸ்: தனிமைப்படுத்தப்பட்ட 1700 பயணிகள்
வைரஸ் பரவல் அச்சம் காரணமாக பிரான்சில் சொகுசு கப்பலில் பயணித்த 1700 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
சொகுசு கப்பலில் வேகமாக பரவும் வைரஸ்
அம்பாசிடர் குரூஸ் லைன்(Ambassador Cruise Line) என்ற சொகுசு கப்பல் மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுலா பயணம் மேற்கொண்டிருந்த நிலையில், “நோரோவைரஸ்”(Norovirus) பரவல் அச்சம் காரணமாக பிரான்ஸ் நாட்டின் போர்டோ(Bordeaux) நகரில் அவசரமாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது.
கப்பலில் வேகமாக பரவி வரும் நோரோ வைரஸ் கட்டுப்படுத்த சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.

Le Figaro என்ற செய்தி நிறுவனம் புதன்கிழமை வெளியிட்ட தகவலின் படி, 514 கப்பல் ஊழியர்கள் மற்றும் 1,233 பயணிகள் உட்பட கப்பலில் பயணம் செய்த 1700-க்கும் மேற்பட்ட நபர் கப்பலுக்குள்ளேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
அம்பாசிடர் குரூஸ் லைன் கப்பலில் சிக்கியுள்ள பெரும்பாலான சுற்றுலா பயணிகள் பிரிட்டிஷ் மற்றும் ஐரிஷ் குடிமக்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
உயிரிழந்த 90 வயது முதியவர்
இந்த அசாதரணமான சூழ்நிலைக்கு 90 வயது பயணி ஒருவர் உயிரிழந்ததே முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

முதியவரின் மரணத்திற்கான காரணத்தை அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து வரும் நிலையில், பயணிகள் 50 பேருக்கு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஆகிய அறிகுறிகள் தென்பட்டுள்ளன.
இந்நிலையில் பிரிட்டிஷ் தீவுகள் மற்றும் பிரான்ஸ் கடற்கரை பகுதிகளுக்கான சுற்றுலா பயணம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |