சுவிட்சர்லாந்தில் முதன்முறையாக 20 வயதுடையவர்களை விட 65 வயதுடையவர்கள் அதிகரிப்பு
உலக நாடுகள் பலவற்றில் முதியவர்கள் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. அது நல்ல விடயம்தான், அதில் தவறேதும் இல்லை.
ஆனால், இளைஞர்கள் எண்ணிக்கை அதற்கு ஈடாக இருக்கவேண்டும். ஆனால், நிலவரம் அப்படி இல்லை.
அதாவது, உலக நாடுகள் பலவற்றில் ஏராளமானோர் சில ஆண்டுகளில் பணி ஓய்வு பெற இருக்கும் நிலையில், அந்த இடங்களை நிரப்ப, போதுமான இளைஞர்கள் இல்லை!
சுவிட்சர்லாந்தில் முதன்முறையாக...
இந்நிலையில், சுவிட்சர்லாந்தில் முதல் முறையாக, 20 வயதுக்குட்பட்டவர்களை விட 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது தெரியவந்துள்ளது.

2025ஆம் ஆண்டுக்கான ஃபெடரல் புள்ளியியல் அலுவலகத் தரவுகள், முதியவர்கள் எண்ணிக்கை சீராக அதிகரித்து வருவதைக் காட்டுகின்றன.
2025ஆம் ஆண்டின் இறுதியில், சுவிட்சர்லாந்தின் மக்கள்தொகை 9.12 மில்லியனை எட்டியுள்ளது.
அதில், தற்போது 65 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களின் எண்ணிக்கை, இளைஞர்களின் எண்ணிக்கையை விட சற்றே அதிகமாக உள்ளது.
65 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையவர்கள் எண்ணிக்கை 1.81 மில்லியனாக இருக்கும் நிலையில், 20 வயதுக்குட்பட்டவர்கள் எண்ணிக்கையோ 1.80 மில்லியனாக உள்ளது.
அத்துடன், பிறப்புகள் எண்ணிக்கை மேலும் குறைந்து வருகின்றது. 2024ஆம் ஆண்டில் பிறப்பு எண்ணிக்கை 2.2 சதவிகிதம் அளவுக்கு சரிவடைந்த நிலையில், 2025ஆம் ஆண்டில் பிறப்பு எண்ணிக்கை 0.5 சதவிகிதம் குறைந்துள்ளது.
அதே நேரத்தில், இறப்பு எண்ணிக்கை நிலையாக இருந்துள்ளது. 2025ஆம் ஆண்டில் சுமார் 71,700 பேர் உயிரிழந்தனர், இது முந்தைய ஆண்டை விட 0.3 சதவிகிதம் குறைவாகும்.
விடயம் என்னவென்றால், இந்த மக்கள்தொகை மாற்றம், விரைவில் ஓய்வூதிய நிதிகளில் பிரதிபலிக்கும்.
அதாவது, அரசு ஓய்வூதியங்கள் 65 வயதிலிருந்து வழங்கப்படுகின்றன. வயதானவர்கள் எண்ணிக்கை அதிகரிக்க, வருவாயை ஏற்படுத்தும் இளம் வயதினர் எண்ணிக்கை குறைந்துவருவதால், ஓய்வூதியம் வழங்குவது கவனம் ஈர்க்கும் ஒரு விடயமாக மாறக்கூடும் என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |