பட்டப்பகலில் காரை கடத்த முயன்ற சிறுமிகளால் கொல்லப்பட்ட புலம்பெயர்ந்தவர்: வீடியோ வெளியானது
அமெரிக்காவில், பட்டப்பகலில் தனது காரைக் கடத்த முயன்ற சிறுமிகளிடமிருந்து காரைக் காப்பாற்ற முயன்ற புலம்பெயர்ந்தவர் பரிதாபமாக கொல்லப்படும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
விர்ஜினியாவைச் சேர்ந்த Mohammad Anwar (66) என்ற புலம்பெயர்ந்தவர், உபேர் ஈட்ஸ் நிறுவனத்துக்காக கார் ஓட்டிக்கொண்டிருந்திருக்கிறார்.
அப்போது, திடீரென காருக்குள் ஏறிய 13 மற்றும் 15 வயதான சிறுமிகள் இருவர், காரில் அமர்ந்துகொண்டு, டேஸர் என்னும் மின்சாரம் கொடுக்கும் கருவியால் Anwarஐத் தாக்கி, காரை அவரிடமிருந்து திருடிச் செல்ல முயன்றுள்ளார்கள்.
Anwar அவர்களிடமிருந்து காரைக் காப்பாற்றப் போராடியிருக்கிறார். அவர் விடாமல் கார் கதவைப்பிடித்துத் தொங்கிக்கொண்டிருக்கும் நிலையில், ஒரு சிறுமி திடீரென காரை வேகமாக செலுத்தியிருக்கிறாள்.
சீறிப்பாய்ந்த கார், ஒரு திருப்பத்தில் சாலையோரம் இருந்த தடுப்பில் மோதிக் கவிழ, காரிலிருந்து தூக்கி எறியப்பட்டுள்ளார் Anwar.
அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றும், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார் அவர்.
இதற்கிடையில், நடப்பதைக் கண்ட தேசிய பாதுகாப்புப் படையைச் சேர்ந்த இருவர், அந்த சிறுமிகளை தப்ப விடாமல் காரை சூழ்ந்துகொண்டு, அவர்களை பிடித்துவைத்துக்கொண்டு பொலிசார் வந்து அவர்களை கைது செய்தபிறகே அங்கிருந்து நகர்ந்திருக்கிறார்கள்.
வெளியாகியுள்ள வீடியோ ஒன்றில், தனது காரைக் காப்பாற்ற Anwar போராடுவதையும், பின்னர் அவர் தூக்கியெறியப்பட்டு கிடக்கும் காட்சிகளையும் காணலாம்.
பாகிஸ்தானிலிருந்து புலம்பெயர்ந்தவரான Anwar, தனது மனைவி, மூன்று பிள்ளைகள் மற்றும் நான்கு பேரக்குழந்தைகளுக்காக இந்த வயதிலும் வேலை செய்துவந்த நிலையில், அந்த சிறுமிகளால் அவர்களது குடும்பம் அநாதரவாக விடப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சிறுமிகளில் 13 வயதான சிறுமி, தென்கிழக்கு வாஷிங்டன் டி.சியையும், 15 வயதான சிறுமி ஃபோர்ட் வாஷிங்டன் என்ற பகுதியையும் சேர்ந்தவர்களாவார்கள்.
இந்த இரண்டு சிறுமிகளும் சமுதாயத்துக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடியவர்கள் என்றும், அவர்கள் நாட்டை விட்டுத் தப்பியோடும் அபாயம் உள்ளது என்றும் கூறி, அவர்கள் இம்மாதம் 31ஆம் திகதி நீதிமன்றத்தில் மறுபடியும் ஆஜர் செய்யப்படும் வரை, அவர்கள் இருவரையும் காவலில் அடைக்குமாறும் நீதிபதி உத்தரவிட்டார்.
அவர்கள் இருவரும் சிறார் குற்றவாளிகள் என்பதால், அவர்களது பெயரோ புகைப்படங்களோ வெளியிடப்படவில்லை.

