குளிரூட்டி பெட்டியில் மிதந்தபடி பசிபிக் கடலில் 5 நாட்கள் தத்தளித்த 2 மீனவர்கள்
பசிபிக் பெருங்கடலில் பெரிய குளிரூட்டி பெட்டியில் மிதந்த படி இருந்த மெக்சிகோ மீனவர்கள் இருவர் மீட்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கடலில் தத்தளித்த 2 மீனவர்கள்
பசிபிக் பெருங்கடலில் பெரிய குளிரூட்டி பெட்டியை பாய்மர படகு போல பயன்படுத்திக் கொண்டு 5 நாட்கள் கடலில் தத்தளித்த படி உயிருக்கு போராடிய 53 வயது டேனியல் குவாரெரோ மார்டினெஸ் மற்றும் 32 வயது ஜோஸ் லூயிஸ் போர்டெலாஸ் விலேகஸ் ஆகிய இரண்டு மெக்சிகோ மீனவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
கடந்த ஆகஸ்ட் 13ம் திகதி மெக்சிகோவின் சியாபாஸ் மாநிலத்தின் பாரெடான் பகுதியில் இருந்து இந்த இரண்டு மீனவர்களும் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றுள்ளனர்.

இவர்கள் கரையில் இருந்து கிட்டத்தட்ட 75 மைல் தொலைவில் இருந்த போது ஆகஸ்ட் 14ம் திகதி இவர்களது வயர்லெஸ் தொடர்பு முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து குறித்த நேரத்தில் மீனவர்கள் கரைக்கு திரும்பாததை அடுத்து உள்ளூர் அதிகாரிகள் தீவிர தேடுதல் வேட்டையில் களமிறங்கியுள்ளனர்.
மீட்பு மற்றும் சிகிச்சை
5 நாட்களுக்கு பிறகு சியாபாஸ் கடற்கரையில் இருந்து 130 கடல் மைல்கள் தூரத்தில் காணாமல் போன இரண்டு மீனவர்களையும் மெக்சிகோ கடற்படை வீரர்கள் கண்டறிந்து மீட்டுள்ளனர்.
மீட்கப்பட்ட இரண்டு மீனவர்களும் ஹெலிகாப்டர்கள் மூலம் கரைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு கடுமையான நீரிழப்பு ஏற்பட்டிருந்த நிலையில் தேவையான முதலுதவி சிகிச்சைகள் வழங்கப்பட்டு தற்போது இருவரும் ஆபத்தை தாண்டி நலமுடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் மீனவர்கள் வழக்கமான பாதையை விட்டுவிட்டு எப்படி இவ்வளவு தூரம் விலகிச் சென்றார்கள் என்பது குறித்து கடல்சார் அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |