கர்ப்பிணி எம்.பி.யை எட்டி உதைத்த இரண்டு எம்.பி.க்களுக்கு சிறை., நாடாளுமன்றத்தில் நடந்த சம்பவம்
மேற்கு ஆப்பிரிக்க நாடான செனகல் நாட்டின் நாடாளுமன்றத்தில் டிசம்பர் மாதம் முதல் திகதியில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
அப்போது பட்ஜெட் தொடர்பாக ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களிடையே ஏற்பட்ட வாக்குவாதம் கை கலப்பாக மாறியது.
ஆளும்கட்சியை சேர்ந்த பெண் எம்.பி.யான ஆமி என்டியாயோவை (Amy Ndiaye), எதிர்க்கட்சியை சேர்ந்த மசாட்டா சாம்ப் (Massata Samb) என்ற எம்.பி. கன்னத்தில் பளார் என அறைந்தார்.
இதனால் ஆத்திரமடைந்த ஆமி, மசாட்டா மீது நற்காலியை வீசி எறிந்தார். அப்போது மசாட்டாவும், எதிர்க்கட்சியை சேர்ந்த மற்றொரு எம்.பி.யான மாமடோவ் நியாங்கும் (Mamadou Niang) ஆமியின் வயிற்றில் எட்டி உதைத்தனர்.
இந்த சம்பவம் நடந்த சமயத்தில் ஆமி கர்ப்பமாக இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தன்னை கண்மூடித்தனமாக தாக்கிய சக எம்.பி.க்கள் மீது ஆமி வழக்கு தொடர்ந்தார்.
இதுதொடர்பான வழக்கு விசாரணை அந்த நாட்டின் தலைநகர் தக்கார் கோர்ட்டில் நடந்து வந்தத நிலையில், செவ்வாய்கிழமை இறுதி விசாரணை நடந்தபோது, மசாட்டா மற்றும் நியாங் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதாக கூறி நீதிமன்றம் இருவரையும் குற்றவாளியாக அறிவித்தது.
அப்போது ஆமி சார்பில் ஆஜரான வக்கீல், குற்றவாளிகள் இருவருக்கும் தலா 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க வேண்டும் என நீதிபதிகளை வலியுறுத்தினார். ஆனால், அதை ஏற்க மறுத்த நீதிபதிகள் இருவருக்கும் தலா 6 மாதம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தனர்.