இரண்டு விடயங்கள்... பிரதமர் ஸ்டார்மருக்கு எச்சரிக்கை விடுத்த ஜனாதிபதி ட்ரம்ப்
தங்களது முறிந்த உறவைச் சரிசெய்ய கெய்ர் ஸ்டார்மர் செய்ய வேண்டிய இரண்டு விடயங்களை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெளிப்படுத்தியுள்ளார்.
குடியேற்றக் கொள்கை
தனது ஆலோசனையைப் புறக்கணித்தால், பிரதமருக்கு வெற்றிபெற வாய்ப்பே இல்லை என்றும் அமெரிக்க ஜனாதிபதி எச்சரிக்கை விடுத்தார்.

திங்களன்று ட்ரூத் சோஷியல் தளத்தில் பதிவிட்டுள்ள ட்ரம்ப், லார்ட் மாண்டல்சனை அமெரிக்கத் தூதராக நியமித்த ஸ்டார்மரின் முடிவை மிக மோசமான ஒரு தெரிவு என்று குறிப்பிட்டார்.
மேலும், அந்த சிக்கலில் இருந்து மீண்டுவர அவருக்கு போதுமான நேரம் இருப்பதாகவும் ட்ரம்ப் சுட்டிக்காட்டியுள்ளார். வியாழக்கிழமை BBC செய்தி நிறுவனத்திடம் பேசிய ட்ரம்ப், வடகடல் எண்ணெய் மற்றும் இங்கிலாந்தின் குடியேற்றக் கொள்கையை மேற்கோள் காட்டி, அந்தப் பதிவின் மூலம் தான் என்ன கூற விரும்பியதையும் விளக்கியுள்ளார்.
ஸ்டார்மர் வட கடலைத் திறந்துவிட்டு, தனது குடியேற்றக் கொள்கைகளை வலுப்படுத்தினால், தற்போது அவை அவ்வாறு இல்லை என்றாலும், அவரால் மீண்டு வர முடியும்; ஆனால் அவர் அவ்வாறு செய்யாவிட்டால், அவருக்கு வெற்றிபெற வாய்ப்பிருப்பதாக தாம் கருதவில்லை என்றார்.
மேலும், அடுத்த வாரம் முன்னெடுக்கப்படும் அரசுமுறைப் பயணம், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவைச் சீர்செய்ய உதவக்கூடும் எனவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
பிரித்தானியா மற்றும் அமெரிக்கா இடையேயான உறவுகள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மோசமடைந்துள்ள நிலையில், மன்னர் சார்லஸும் ராணியார் கமிலாவும் அடுத்த திங்கட்கிழமை நான்கு நாள் அரசுமுறைப் பயணமாக அமெரிக்காவுக்குப் புறப்படவுள்ளனர்.

மேலும், சார்லஸ் மன்னர், ட்ரம்ப்புடன் ஒரு தனிப்பட்ட சந்திப்பை மேற்கொள்வார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. அத்துடன் அமெரிக்காவின் 535 நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில், தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் ஒரு உரையை ஆற்றவிருக்கிறார்.
ஒரு நாடு இருக்காது
ஆனால், பிரதமர் ஸ்டார்மருக்கும் அமெரிக்க ஜனாதிபதிக்கும் இடையே வார்த்தைப் போர் தொடர்ந்து நடைபெற்று வரும் சூழலில், சார்லஸ் மன்னர் இந்த அரசுமுறைப் பயணத்தை மேற்கொள்ளவுள்ளார்.
குடியேற்றம் மற்றும் வட கடல் எண்ணெய் விவகாரங்கள் தொடர்பாக, ஜனாதிபதி ட்ரம்ப் ஸ்டார்மரையும் பிரித்தானிய அரசாங்கத்தையும் கடுமையாக விமர்சித்துள்ளார்.

சட்டவிரோத குடியேறிகள் உடனடியாக நாடு கடத்தப்படாவிட்டால், பிரித்தானியர்களுக்கு என்றே ஒரு நாடு இருக்காது என்று கடந்த நவம்பர் மாதம் ஜனாதிபதி ட்ரம்ப் எச்சரித்தார்.
மட்டுமின்றி, வட கடலில் எண்ணெய் வளத்தை பிரித்தானியா பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என ட்ரம்ப் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறார்.
மட்டுமின்றி, பிரித்தானியாவின் வளர்ச்சியை அதிகரித்து, எரிசக்தி கட்டணங்களைக் குறைக்க உதவும் வகையில், எண்ணெய் துளையிடும் நிறுவனங்களுக்கு ஊக்கமளிக்குமாறு கெய்ர் ஸ்டார்மரை ஜனாதிபதி ட்ரம்ப் கேட்டுக்கொண்டார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |