திடீர் நிலநடுக்கம் - சிறையிலிருந்து 200க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பி ஓட்டம்
பாகிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் போது 200க்கும் மேற்பட்ட சிறைக்கைதிகள் தப்பி ஓடியுள்ளனர்.
பாகிஸ்தானில் நிலநடுக்கம்
பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில், 16 முறை சிறிய அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதில் கட்டங்கள் குலுங்கியதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிந்து மாகாணத்தின் தலைநகரான கராச்சியை அடுத்துள்ள மாலிர் மாவட்ட சிறைச்சாலையில்(Malir Prison) இருந்த 600 கைதிகள் சிறை அறைக்குள் இருந்து வெளியே அழைத்து வரப்பட்டு, பிரதான வாயில் அருகே ஒன்று குவிக்கப்பட்டனர்.
இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள நினைத்த சிறைக்கைதிகள் சிலர், சிறைகாவலர்களுடன் மோதலில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த மோதலில், காவலர் நடத்திய துப்பாக்கிசூட்டில் கைதி ஒருவர் உயிரிழந்துள்ளார். 4 காவலர்கள் காயமடைந்துள்ளனர்.
சிறைக்கைதிகள் தப்பி ஓட்டம்
இதில், 200க்கும் மேற்பட்டோர் தப்பிச்சென்றுள்ளனர். அதில், 80 பேர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவாக உள்ள 130க்கும் மேற்பட்டோர் தீவிரமாக தேடப்பட்டு வருகின்றனர்.
தப்பியோடியவர்கள் தாங்களே வந்து சரணடையுமாறு சிந்து மாகாண முதலமைச்சர் முராத் அலி ஷா தொலைக்காட்சியில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து விசாரிக்க ஒரு விசாரணைக் குழு அமைக்கப்படும் என்றும், இந்த சிறை உடைப்பு சம்பவம், பாகிஸ்தானில் இதுவரை நடந்த மிகப்பெரிய சிறை உடைப்புகளில் ஒன்றாகும் என சிந்து மாகாண உள்துறை அமைச்சர் ஜியா-உல்-ஹசன் லஞ்சார் தெரிவித்துள்ளார்.
சம்பவம் நடந்த நேரத்தில் மாலிர் சிறையில் 6,000 க்கும் மேற்பட்ட கைதிகள் இருந்தனர், அவர்களில் பெரும்பாலோர் போதைப்பொருள் தொடர்பான வழக்குகளில் ஈடுபட்டவர்கள் என்று சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |