பீட்ஸா கடை ஊழியர் கொலை: 13 முதல் 17 வயதுடைய ஆறு சிறுவர்கள் கைது..இஸ்ரேலில் அதிர்ச்சி சம்பவம்
இஸ்ரேலில் சுதந்திர தினத்தன்று 21 வயது இளைஞர் குத்திக்கொல்லப்பட்டது தொடர்பில், ஆறு சிறுவர்கள் கைது செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பதின்ம வயதினர்
பெட்டா டிக்வா நகரில் இஸ்ரேலின் சுதந்திர தினத்தன்று, பீட்ஸா உணவக வளாகம் ஒன்றில் பதின்ம வயதினர் சிலர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது யெமனு பின்யாமின் ஜெல்கா என்ற 21 வயது ஊழியர், அந்த குழுவை அணுகி வளாகத்திற்குள் கொண்டாட்ட ஸ்ப்ரேக்களைப் பயன்படுத்துவதை நிறுத்துமாறு கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த அந்தக் குழு, ஜெல்கா பணியை முடித்துவிட்டு வெளியே வரும்வரை காத்திருந்து அவரை கடுமையாக தாக்கியுள்ளது.
மேலும் அந்த மோதல் வன்முறையாக மாற, கத்தியால் குத்தப்பட்டதில் ஏற்பட்ட காயங்களால் ஜெல்கா உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
இதனையடுத்து காவல்துறை நடத்திய தீவிர விசாரணைக்குப் பிறகு, 13 முதல் 17 வயதிற்குட்பட்ட சந்தேக நபர்கள் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

சுமார் 10 பேர் ஈடுபட்டிருக்கலாம்
எனினும், இச்சம்பவத்தில் சுமார் 10 பேர் ஈடுபட்டிருக்கலாம் என புலனாய்வாளர்கள் நம்புகின்றனர்.
இருப்பினும், அவர்களில் ஒருவர் மட்டுமே மரணத்தை விளைவித்த காயத்தை ஏற்படுத்தியதாக சந்தேகிக்கப்படுகிறார். காவல் அதிகாரிகள் ஒவ்வொரு தனிநபரின் பங்கையும் கண்டறிய முயன்று வருகின்றனர். இச்சம்பவம் உள்ளூர் சமூகத்தை உலுக்கியுள்ளது.
மேலும், இளைஞர் வன்முறை குறித்த புதிய கவலையையும் தூண்டியுள்ளதாக கூறப்படுகிறது. அத்துடன் அதிகாரிகள் இத்தாக்குதல் சம்பவத்தை வன்மையாகக் கண்டித்துள்ளனர்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |