2025 IPL; பந்தில் உமிழ்நீர் பயன்படுத்த அனுமதி - புதிதாக அறிமுகமாகும் 2வது பந்து விதி
வரும் ஐபிஎல் தொடரில் இரண்டாவது பந்து விதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
2025 ஐபிஎல் தொடர்
18 வது ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 22 ஆம் திகதி தொடங்கி மே 25 ஆம் திகதி வரை நடைபெற உள்ளது.
கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில், நடைபெற உள்ள முதல் போட்டியில், கொல்கத்தா மற்றும் பெங்களூரு அணிகள் மோத உள்ளது.
இந்நிலையில், இந்த ஐபிஎல் தொடரில் புதிதாக 2 விதிகளை பிசிசிஐ அமல்படுத்த உள்ளது.
மும்பையில் உள்ள பிசிசிஐ தலைமை அலுவலகத்தில் இன்று, ஐபிஎல் அணிகளின் அணித்தலைவர்கள் மற்றும் நடுவர்கள் உடனான நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் இந்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.
பந்தில் உமிழ்நீர் பயன்படுத்த அனுமதி
பந்து தேய்ந்துள்ள நிலையில், பந்து வீச்சாளர்கள் reverse swing செய்வதற்காக, பந்தின் ஒரு பக்கத்தில் உமிழ்நீரை தடவி, அதை பளபளப்பாக மாற்றுவார்கள்.
2019 ஆம் ஆண்டு கொரோன காலக்கட்டத்தில், பந்து வீச்சாளர்கள் பந்தில் உமிழ்நீரை பயன்படுத்த ஐசிசி தடை விதித்தது.
இந்த தடையை நீக்குமாறு, முகமது ஷமி, டிம் சவுத்தி, வெர்னான் பிலாண்டர் உள்ளிட்ட பந்து வீச்சாளர்கள் ஐசிசிக்கு கோரிக்கை வைத்தனர்.
இந்நிலையில், இந்த ஐபிஎல் தொடரில் பந்தில் உமிழ் நீரை பயன்படுத்த விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளது.
இரண்டாவது பந்து விதி
அதே போல், இரண்டாவது பந்து(second ball rule) என்ற விதியை இந்த ஐபிஎல் தொடரில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
மாலை நேரங்களில் நடைபெறும் போட்டிகளில், இரண்டாவது இன்னிங்ஸ் விளையாடும் போது மைதானத்தில் பனியின் தாக்கம் இருக்கும் போது, பந்து வீச்சாளர்கள் பந்தை பிடிப்பது கடினமாக இருக்கும்.
இந்த இயற்கை சூழல், துடுப்பாட்டகாரர்களுக்கு சாதகமாக இருப்பதால், இந்த விதி அமல்படுத்தப்படுகிறது.
இதன்படி, மாலை நேரங்களில் நடைபெறும் போட்டிகளில் இரண்டாவது இன்னிங்ஸில், 11வது ஓவர்களுக்கு பிறகு பந்தை மாற்ற வேண்டுமா என்பதை, மைதானத்தில் நிலவும் பனியை பொறுத்து நடுவர் முடிவெடுப்பார்.
பிற்பகலில் பனியின் தாக்கம் இருக்காது என்பதால், அப்போது நடைபெறும் போட்டிகளில் இந்த விதி இருக்காது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |