சொகுசுக் கப்பலில் வைரஸ் தொற்று பரவல்: சுற்றுலா சென்ற பிரித்தானியர் தீவிர சிகிச்சைப்பிரிவில்
சொகுசுக் கப்பல் ஒன்றில் வைரஸ் தொற்று ஒன்று பரவியதில் மூன்று பேர் பலியான நிலையில், பிரித்தானியர் ஒருவர் ஜோஹன்னஸ்பர்கிலுள்ள மருத்துவமனை ஒன்றின் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சொகுசுக் கப்பலில் வைரஸ் தொற்று பரவல்

MV Hondius என்னும் சொகுசுக் கப்பல் அர்ஜெண்டினாவிலிருந்து Cape Verde என்னுமிடத்துக்குப் பயணித்துக்கொண்டிருந்திருக்கிறது.
அப்போது திடீரென 70 வயது நபர் ஒருவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது. செயிண்ட் ஹெலனா தீவை அடையும்போது உயிரிழந்துள்ளார்.
அவரது மனைவியான நெதர்லாந்து நாட்டவரான 69 வயதுப் பெண்மணி நாடு திரும்புவதற்காக தென்னாப்பிரிக்காவிலுள்ள விமான நிலையம் ஒன்றிற்குச் சென்றிருந்த நிலையில், அவரும் நிலைகுலைந்து சரிந்துள்ளார். பின்னர் அவரும் உயிரிழந்துள்ளார்.
மூன்றாவது நபர் ஒருவரும் உயிரிழந்துள்ளார். அவர் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.
அதேபோல, அதே சொகுசுக் கப்பலில் பயணித்த பிரித்தானிய சுற்றுலாப்பயணி ஒருவருக்கும் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது. அவர் தென்னாப்பிரிக்காவில் மருத்துவமனை ஒன்றின் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவர்கள் அனைவருமே, ஹன்டா வைரஸ் என்னும் எலிகள் மூலம் பரவும் வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளார்கள்.

கடந்த ஆண்டு தன் வீட்டில் உயிரற்ற நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட பிரபல ஹாலிவுட் நடிகரான ஜீன் ஹாக்மேனின் மனைவியான பெட்ஸியும் இதே ஹன்டா வைரஸ் தொற்றால் உயிரிழந்ததாக உடற்கூறு ஆய்வு முடிவுகள் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |