படு வேகத்தில் வந்த SUV கார்; சாலையில் தூங்கிக்கொண்டிருந்த 2 பேருக்கு நேர்ந்த பரிதாபம்., 13 வயது சிறுமி கைது!
அமெரிக்காவில் சாலையில் தூங்கிக்கொண்டிருந்த வீடற்ற 2 பேரை, காரை ஏற்றி கொலை செய்த சம்பவத்தில் 13 வயர் சிறுமி கடந்த வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் பிப்ரவரி 12 நள்ளிரவு சான் டியாகோ கவுண்டியின் வடக்கு கவுண்டி பிராந்தியத்தில் நடந்தது.
அன்றைய நாள், இரவு 11.20 மணியளவில் Mission Ave. மற்றும் Gamble St. சந்திப்புக்கு அருகே ஒரு வெள்ளை நிற Ford Explorer கார் படு வேகத்தில் போக்குவரத்து விதிகளை மீறிச் சென்றுள்ளது.
அவர்களை, எச்சரித்தபடி காரை நிறுத்துமாறு பொலிஸார் அருகே சென்றுள்ளனர். அந்த நேரத்தில், பொலிஸிடமிருந்து தப்பிக்க மீண்டும் காரை வேகமாக எடுத்துள்ளார் ஓட்டுநர்.
அப்போது, இரண்டு சிக்னலை கடந்து இடதுபுறம் திரும்ப முயற்சித்தபோது, கட்டுப்பாட்டை இழந்து, ஒரு பெட்ரோல் ஸ்டேஷனுக்கு அருகில் படுத்து தூங்கிக் கொண்டிருந்த 2 நபர்கள் மீது ஏறியது.
மெக்ஸிகோவிலிருந்து தோட்ட வேலைக்கு வந்த அவர்கள் Mateo Salvador (33) மற்றும் Sofio Sotelo Torres (51) என்று அறியப்படுகிறார்கள்.
அவர்களில் ஒருவர் சம்பவ இடத்துலேயே இறக்க, மற்றோருவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
மீண்டும் தப்பிக்க முயற்சி செய்த நிலையில், விதிகளை மீறி காரை ஓட்டிய 13 வயது சிறுமியையும், பின் இருக்கையில் அமர்ந்துவந்த அவரது தோழியையும் பொலிஸார் பிடித்து நிறுத்தினர்.
சிறுவர்கள் என்பதால் சம்பவம் நடந்த பிறகு இருவரும் தங்கள் வீட்டிற்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
ஆனால், வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்ட நிலையில், கோர்ட்டின் உத்தரவின்படி காரை ஓட்டிவந்த 13 வயது சிறுமியை பொலிஸ் வியாழக்கிழமை கைது செய்தனர்.
விசாரணையில், அந்த சிறுமி சம்பவம் நடந்த அன்று ஒரு ஜாலி ரைடு செல்வதற்காக தனது அம்மாவின் காரை கேட்காமல் கொள்ளாமல் திருடிச் சென்றுள்ளார் என்பது தெரியவந்தது.
அவர் மீது வாகனம் ஏற்றி படுகொலை செய்ததற்காகவும், பொலிசிடமிருந்து தப்பி ஓடியதற்காகவும் மற்றும் மோசமான தாக்குதலை நடத்திவிட்டு தப்பி ஓட முயற்சித்ததற்காகவும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
பின் இருக்கையில் வந்த பயணி மீது எந்த குற்றச்சாட்டுகளும் வைக்கப்படவில்லை.



